தெலுங்கானா: பாஜக தலையில் பாறாங்கல்லை போட்ட சீனியர் விவேக் வெங்கட்சாமி- நாளை காங்கிரஸில் இணைகிறார்!
ஹைதராபாத்: தெலுங்கானா பாஜகவின் முகமாக இருந்த மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான விவேக் வெங்கட்சாமி அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். விவேக் வெங்கட்சாமி நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவும் களத்தில் இருக்கிறது. ஆனால் தேர்தல் கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அல்லது காங்கிரஸ் ஆட்சி என கணிக்கின்றன. பாஜகவுக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் எனவும் கூறுகின்றன. பொதுவாக தெலுங்கானா தேர்தல் களம் காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் ஆளும் பிஆர்எஸ், பாஜகவின் தலைவர்கள் பலரும் காங்கிரஸ் பக்கம் செல்கின்றனர்.

விவேக் வெங்கட்சாமி : இந்த வரிசையில் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் எம்பியுமான விவேக் வெங்கட்சாமி தற்போது அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். பாஜகவில் இருந்து விலகிய விவேக் வெங்கட்சாமி நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் கூட விவேக் வெங்கட்சாமி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தாம் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜகவில் இருந்து விவேக் வெங்கட்சாமி வெளியேறிவிட்டார். அவரது விலகல் தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.
6-வது முறையாக கட்சி தாவல்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவேக் வெங்கட்சாமி, முதலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) கட்சிக்கு தாவினார். பின்னர் ராகுல் காந்தி அழைப்பை ஏற்று காங்கிரஸுக்கு மீண்டும் திரும்பினார். ஆனால் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு தாவி அரசின் ஆலோசகரானார். பின்னர் பாஜகவில் இணைந்தார். இப்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்திருக்கிறார். டிஆர்எஸ்- இப்போதைய பிஆர்எஸ் கட்சியில் இருந்தும் காங்கிரஸில் இருந்தும் மாறி மாறி கட்சி தாவியவர் இப்போது பாஜகவுக்கும் குட்பை சொல்லிவிட்டு தாய் வீடு திரும்பி உள்ளார். இவரது தந்தை வெங்கட்சாமி காங்கிரஸின் மூத்த தலைவர், தொழிலதிபர்.












Click it and Unblock the Notifications