சந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்
ஹைதராபாத்: டிக்-டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர், ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
தினம், தினம் டிக் டாக் செயலியால் அரங்கேறும் விபரீதங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சம், மாதத்திற்கு 3 உயிரிழப்புக்களாவது ஏற்படுகிறது. சண்டைகள், மிரட்டல்கள் சொல்ல வேண்டியதே இல்லை என்ற அளவிற்கு மேலோங்கி உள்ளது.

இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம் தூல பள்ளியை சேர்ந்த பிரசாந்த், நரசிம்மலு இருவரும் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். அங்கு, டிக்-டாக் செயலியில் பதிவேற்றம் செய்வதற்காக இருவரும் தண்ணீருக்குள் நின்றபடி செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற நரசிம்மலு நீரில் மூழ்கினார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரசாந்த் அங்கிருந்தவர்களை அழைத்தார். கிராம மக்கள் ஏரிக்குள் இறங்கி தேடிய போது, நரசிம்மலு சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவர்கள், இளைஞர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவரிடமும் தற்போது டிக்-டாக் மோகம் அதிகரித்துள்ளதால், ஆபத்தை அறியாமல் வித்தியாசமான வீடியோவை பதிவிடும் நோக்கில் பலர் உயிரிழக்கின்றனர். நரசிம்மலு, டிக் டாக் எடுப்பதற்காக பின்நோக்கி சென்றுள்ளார். ஆனால், பெரிய பள்ளம் இருப்பதை அறியாமல், குழியில் சிக்கி உயிரிழந்து இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
இதனிடையே, சில மாதங்களுக்கு முன் டிக் டாக்கைத் தடை செய்ய என்று பெரிய விவாதமே எழுந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை, அடுத்து உயர் நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்தது. பின் இது அவரவர் விருப்பம். பயன்படுத்துவோர் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தடை ஒரு முடிவல்ல என்று டிக் டாக் தரப்பிலிருந்து பேசிய பதிலை ஏற்று இடைக்காலத் தடையை நீக்கியது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications