சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.பி.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி. விஸ்வேஸ்வர் ரெட்டி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
தெலுங்கா மாநிலத்தில் உள்ள சேவெல்லா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் எம்.பி. விஸ்வேஸ்வர் ரெட்டி. தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது.
ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் விஸ்வேஸ்வர் ரெட்டி கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து நேற்று விலகியுள்ளார்.
அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக கூறப்பட்ட நிலையில் இவ்வாறு செய்துள்ளார். இந்த மாதம் சோனியா காந்தி தெலுங்கானா வரும்போது அவர் முன்பு விஸ்வேஸ்வர் ரெட்டி காங்கிரஸில் சேரப் போவதாக கூறப்படுகிறது.
பலம் வாய்ந்த ரெட்டி சமூகத்தை சேர்ந்த விஸ்வேஸ்வர் விலகியுள்ளதால் சில தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. என்ஜினியரான விஸ்வேஸ்வர் ரெட்டி கடந்த 2013ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் சேர்ந்தார்.
அவரின் தாத்தா கொண்டா வெங்கட ரங்கா ரெட்டி சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவர் ஆந்திராவின் துணை முதல்வராக இருந்தவர். அவரை கவுரவிக்கும் வகையில் ரங்கா ரெட்டி என்று ஒரு மாவட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.