செம நியூஸ்! இரட்டை குழந்தைகளை இழந்த தம்பதிக்கு.. 2 ஆண்டுகளுக்கு பின் அதே நாளில் காத்திருந்த சப்ரைஸ்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் விபத்து ஒன்றில் இரட்டை குழந்தைகளை இழந்த தம்பதிக்கு, 2 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அதே நாளில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்பல ராஜூ. கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், 2019ஆம் ஆண்டு செப். 15ஆம் தேதி தெலுங்கானாவின் பத்ராச்சலத்தில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அங்கு இருந்து நீரோடையில் படகு பயணம் செய்த போது, எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் இரட்டையர்கள் உயிரிழந்தனர். அதேபோல அப்பல ராஜூவின் தாயும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தங்கள் இரண்டு குழந்தைகளையும் ஒரே நாளில் இழந்ததில் அப்பல ராஜூ - பாக்யலட்சுமி தம்பதி விரக்தியின் உச்சத்திற்குச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து அந்த ஜோடி குழந்தை வேண்டி கருவுறுதல் மையத்திற்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், இரட்டை குழந்தைகளை இழந்த அதே நாளில் (செப். 15 2021) அப்பல ராஜூ - பாக்யலட்சுமி தம்பதிக்குக் குழந்தை பிறந்துள்ளது. இப்போது பிறந்துள்ள குழந்தைகளும் இரட்டை குழந்தைகள் என்பது மற்றொரு சிறப்பாகும்.
அதாவது எந்த நாளில் தங்கள் இரட்டை குழந்தைகளை இவர்கள் இழந்தார்களோ, அதே நாளில் இவர்களுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. தங்கள் அதே நாளில் குழந்தை பிறக்கும் என்பதையும் சரி, இது இரட்டை குழந்தைகளாக இருக்கும் என்பதையும் சரி சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று பாக்யலட்சுமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications