டவ் தே புயல் பாதிப்பு.. குஜராத்தில் நிவாரண பணிகளுக்கு ரூ1000 கோடி ஒதுக்கீடு.. பிரதமர் மோடி அறிவிப்பு
காந்திநகர்: டவ்-தே புயல் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிதியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அரபிக் கடலில் உருவான அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன் அதிதீவிர புயலாக வலுவடைந்தது. டவ்-தே என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாகக் கேரளா கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் கன மழை பெய்தது.
இந்த புயலின் கோரத் தாண்டவத்தால் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டவ்-தே அதிதீவிர புயலானது திங்கள்கிழமை நள்ளிரவில் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது குஜராத், டாமன் டையு, மகாராஷ்டிரா சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டவ்-தே புயலால் குஜராத் மற்றும் டாமன் டையு மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்களை நேற்று ஆய்வு செய்தார். குஜார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை விமானம் மூலம் ஆய்வு செய்த அவர், அகமதாபாத்தில் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார். அப்போது அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உடனிருந்தார்
இந்நிலையில், டவ்-தே புயல் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிதியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதேபோல இந்த புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.