பிறந்த சான்றிதழுக்கு பதிலாக 'இறப்பு' சான்றிதழ் கொடுத்த 10ம் வகுப்பு மாணவி.. டீச்சர் ஷாக்
கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர், பிறந்த சான்றிதழுக்கு பதிலாக இறப்புச் சான்றிதழ் கொடுத்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இயக்கும் அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் பிறப்புச் சான்றிதழ் கொடுப்பதற்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் வழங்கினார். இதனால் ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்வேதா பூஜாரி என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவரிடம் பிறப்பு சான்றிதழ் கேட்டிருக்கிறார் ஆசிரியர். மாணவியும் தான் பெல்லூர் பஞ்சாயத்தில் இருந்து பெற்ற சான்றிதழை ஆசிரியரிடம் கொடுத்திருக்கிறார்.
அதனைப் பார்த்த ஆசிரியர் அதிர்ச்சியாகிவிட்டார். ஏனென்றால் மாணவி ஸ்வேதா கொடுத்த சான்றிதழ் இறப்புச் சான்றிதழ். பதற்றம் அடைந்த ஆசிரியர் இது எப்படி நடந்தது என தீவிரமாக விசாரித்ததில், மாணவிக்கு பெல்லூர் பஞ்சாயத்தில் பிறப்பு சான்றிதழ் 14 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டது என்று தெரிந்தது. அப்போது பஞ்சாயத்து அலுவலகம் பிறப்பு சான்றிதழ் கொடுப்பதற்குப் பதிலாக இறப்புச் சான்றிதழை ஸ்வேதாவிற்கு வழங்கியது தெரிய வந்தது.
ஸ்வேதாவின் தந்தைக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் என்ன சான்றிதழ் பஞ்சாயத்து அலுவலகம் வழங்கியது என்று தெரியவில்லை. சான்றிதழ் முக்கியம் எனக் கருதிய ஸ்வேதாவின் தந்தை ராமண்ணா பீரோவில் பத்திரமாக வைத்துள்ளார். 2002ம் ஆண்டு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதை அறிந்த மாணவி தன் தந்தையிடம் சான்றிதழில் ஏற்பட்ட பிழையைப் பற்றி சொல்லி இருக்கிறார். பின்னர், இது தொடர்பான பெல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் பஞ்சாயத்தின் செயலர் அச்சுத மணியணி, மாணவியின் சான்றிதழில் திருத்தம் செய்யப்பட்டு கொடுக்கப்படும். இதுபோன்ற பிழைகள் பொதுவாக நடைபெறுவதில்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து, மாணவி ஸ்வேதாவின் இறப்புச் சான்றிதழ் திருத்தப்பட்டு, பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவர், இனி 10ம் வகுப்புத் தேர்வு தடையின்றி எழுதலாம்.