மூன்றாவது அணி உதயம்- அதிமுக உட்பட 11 கட்சி எம்.பிக்கள் (நாடாளுமன்றத்தில்) கூட்டாக செயல்பட முடிவு
டெல்லி: லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி உதயமாகியுள்ளது. இதன் முதல் கட்டமாக அதிமுக, இடதுசாரிகள் உள்ள 11 கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கூட்டாக செயல்பட முடிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை உருவாக்க திட்டமிட்டன. இதன் முதல் கட்டமாக டெல்லியில் 11 கட்சி பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோர், மதவாத எதிர்ப்பு மாநாடு கடந்த அக்டோபரில் டெல்லியில் நடைபெற்றது. அதற்கு பிறகு இப்போது பல கட்சிகள் ஓர் அணியாக சேர்ந்துள்ளன என்றனர்.
இதை மூன்றாவது அணி என்று அழைக்கலாமா என்று கேட்டதற்கு, மக்கள் நலன்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களை நாடாளுமன்றத்தில் இந்த 11 கட்சி எம்.பிக்களும் கூட்டாக எழுப்புவது என்று முடிவு செய்துள்ளோம் என்றார் யெச்சூரி
இதில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, எம்.தம்பிதுரை (அதிமுக), பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட்), கே.சி. தியாகி (ஐக்கிய ஜனதா தளம்), ஜெய் பாண்டா (பிஜேடி), பைரன் பைஷியா (ஏஜிபி), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), மனோகர் திர்கே (ஆர்எஸ்பி), வருன் முகர்ஜி (பார்வர்டு பிளாக்) உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
2009 லோக்சபா தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் 3வது அணி போட்டியிட்டது. இதில், 10 கட்சிகள் இடம் பெற்றன. தற்போது இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம் உருவாக்கியிருக்கும் 3வது அணியில் 11 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.