ஆந்திரா, தெலுங்கானாவில் கொளுத்தும் வெயில்... சித்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் பலி
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வெயிலின் கொடுமைக்கு 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி விட்டது. இதே நிலை நீடித்தால் ஏப்ரல், மே மாதங்களில் அதாவது அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் 110 டிகிரியை எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை விட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலின் தாக்கம் இன்னும் உக்கிரமாக உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.
தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் அதிகபட்ச வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இந்த அனல் காற்றில் பாதிக்கப்பட்டு தெலுங்கானாவில் மட்டும் இதுவரை 7க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் இருவர் பள்ளி மாணவர்கள் ஆவர்.
இதேபோல், ஆந்திர மாநிலத்திலும் இதுவரை வெயிலுக்கு 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 பேர் வெயிலின் கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.
கடந்தாண்டு இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.