ஜம்மு காஷ்மீர்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனந்த்நாக்கில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு. 2 போலீசார் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸார் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் முதல்வராக பதவி வகித்த முப்தி முகம்மது சயீது கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தார். இதையடுத்து. அவரது அனந்தநாக் தொகுதியில், வரும் 22 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி போட்டியிடுகிறார்.
இதனால் விஐபி அந்தஸ்து பெற்றுள்ள இந்த தொகுதியில், தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை, அனந்தநாக் பகுதியில் இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அனந்தநாக் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தின் அருகே இரண்டு போலீசார் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த தீவிரவாதிகள், போலீசார் இருவரின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் துணை ஆய்வாளர் பஷிர் அகமது மற்றும் கான்ஸ்டபிள் ரியாஸ் என்பது தெரியவந்துள்ளது. அனந்தநாக் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பிஜ்பெரா பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிஎஸ்எப் படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.