காளான் பறிக்க தைலகாட்டிற்கு சென்ற இரு பெண்கள்.. முகம் சிதைத்து கொலை.. ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே பெரியபாளையம் தைலம் மரக்கட்டில் காளான் பறிக்கச் சென்ற இரண்டு பெண்களை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மேலத் தெரு தண்டபாணி. இவரது மனைவி கண்ணன். இவருடைய மனைவி கண்ணகி (50).
இவரும் தெற்கு தெருவை சேர்ந்த கலைமணியின் மனைவி மலர்விழி (29) ஆகிய இருவரும் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைல மரக்காட்டிற்கு சென்றனர். அந்த பகுதிகளில் தற்போது மழை பெய்துள்ளது.
சசிகலா- நடராஜன்தான் காரணம்.. அத்தை மரணம் இயற்கையானது அல்ல.. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பகீர்
காளான்கள்
இதனால் அந்த காட்டில் முளைத்த காளான்களை நேற்று காலை சுமார் எட்டு மணி அளவில் பறிக்கச் சென்றனர். தைலமரக் காட்டில் யாரும் இல்லாத இடத்தில் காளான்களை பறிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மலர்விழியின் கணவர் கலைமணி தைல காட்டுக்கு சென்றார்.
இளைஞர்கள்
அவருடன் அந்த ஊர் இளைஞர்களும் சென்றிருந்தனர். அப்போது தைல மர காட்டிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு பெண்களுமே அரிவாளால் வெட்டப்பட்டிருந்தனர். மேலும் அவர்களுடைய முகங்களும் சிதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கலைமணி, ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு புகார் அளித்தார்.
இரு சடலங்கள்
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இரு சடலங்களையும் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் இருவரது கழுத்தில் இருந்த 6 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் இந்த கொலை நகைகளுக்காக இருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
என்ன காரணம்
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பெண்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திலிருந்து வயல்வெளி பகுதி வரை மோப்ப நாய் ஓடி கழுவந்தோண்டி சாலை பகுதியில் சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இரு பெண்களும் நகைக்காக கொல்லப்பட்டனரா, இல்லை வேறு ஏதாவது காரணம் இருந்து அதை நகைக்கான கொலையாக கொலையாளிகள் சித்தரித்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. நகைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.