பீகாரில் கொளுத்தும் வெயிலால் எரிந்து சாம்பலான 200 குடிசைகள்
கெஹனாபாத்: பீகாரின் கெஹனாபாத்தில் உள்ள 200 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
பீகார் மாநிலம் கெஹனாபாத் மாவட்டத்தில் உள்ள ஹ்ரிதய்சக் கிராமத்தில் ஏராளமான தலித் மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் வியாழக்கிழமை அந்த கிராமத்தில் உள்ள குடிசைகளில் 200 குடிசைகள் திடீர் என தீப்பிடித்து எரிந்தன.
உடனே இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 200 குடிசைகளும் எரிந்து சாம்பலாகின. ஹ்ரிதய்சக் கிராமத்தில் கொளுத்தி வரும் வெயிலால் தான் குடிசைகள் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெஹனாபாத் மாவட்டத்தில் நேற்று 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியது. வெயிலால் பீகாரின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களில் பல தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.