ஜம்மு-காஷ்மீருக்குள் 105 தீவிரவாதிகள் பதுங்கல்.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் திடுக் தகவல்
காஷ்மீர் மாநிலத்தில் நடப்பு ஆண்டு செப்டம்பர் வரையில் 105 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், சுமார் 200 தீவிரவாதிகள் அந்த மாநில எல்லையில் பதுங்கி இருப்பதாகவும் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் நடப்பு ஆண்டு செப்டம்பர் வரையில் 105 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், சுமார் 200 தீவிரவாதிகள் அந்த மாநில எல்லையில் பதுங்கி இருப்பதாகவும் மாநிலங்களவையில் உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து 201 தடைவைகள் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், அந்த நேரத்தில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 72 தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர் என்றும், 2 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரண்டர் ஆகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2015-ம் ஆண்டில் 33 தீவிரவாதிகள் மட்டுமே ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் ஊடுருவியதாகவும் அவர் தெரிவித்தார். அந்தக் காலக்கட்டத்தில் 121 ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 46 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்றும் ஹன்ஷ்ராஜ் தெரிவித்தார்.
மொத்தத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் 200-க்கும் அதிகமான தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானியர்களின் இந்த ஊடுருவல் முயற்சி தற்போது அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் குற்றம்சாட்டினார்.