5 ஆண்டுகளுக்கு முன் 5,000 பேரை பலி கொண்டு உத்தரகாண்ட்டை உருக்குலைத்த பெருவெள்ளம்
5 ஆண்டுகளுக்கு முந்தைய பெருவெள்ளத்தில் இருந்து மீண்டு எழுந்து வந்து கொண்டிருக்கிறது உத்தரகாண்ட்.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் வரலாறு காணாத பெருவெள்ளத்தை 2013-ம் ஆண்டு ஜூன் 16-ல் எதிர்கொண்டது. இந்த பேரழிவானது சுமார் 5,000 பொதுமக்களை காவு கொண்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் கோவிலை ஒட்டி ஓடுவது மந்தாகினி ஆறு. அப்பகுதியில் கேதார் பனிச்சிகரத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.
இதனால் மந்தாகினி ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. இப்பெருவெள்ளமான மனிதர்களையும் வீடுகளையும் அப்படியே இழுத்துச் சென்றது.
இவ்வெள்ளத்தால் 200 கிராமங்கள் அழிந்தன. கேதார்நாத் பக்தர்களுக்கான சுற்றுலா வழிகாட்டிகள், பக்தர்கள், ஹோட்டல் பணியாளர்கள் என பல்லாயிரம் பேர் மாண்டு போயினர்.
கேதார்நாத் கோவில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் வெள்ளத்துக்கு தப்பவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் இப்பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.
கேதார்நாத் எனும் புனித தலம் ஒரு கைவிடப்பட்ட பேய் நகரமாக அப்போது காட்சி தந்தது. திசையெங்கும் பிணக் குவியல்களையே பார்க்க முடிந்தது என வேதனை தெரிவித்தனர் மீட்புக் குழுவினர்.
தமிழகத்தின் பக்தி பாடல்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கேதாரம் எனப்படும் கேதார்நாத்தை பற்றி பேசுகிறது. அப்பரும் சுந்தரரும் திருஞானசம்பந்தரும் அருளித் தொகுத்தவை தேவாரப் பாடல்களில் 122 திருத்தலங்கள் பற்றி பாடப்பட்டிருக்கின்றன. இந்த 122 திருத்தலத்தில் கேதார்நாத்தும் அடக்கம். திருக்கேதாரம் என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுபவை அனைத்துமே கேதார்நாத்தையே..
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே
பறியேசுமந் துழல்வீர்பறி
நரிகீறுவ தறியீர் குறிகூவிய
கூற்றங்கொளு நாளால்
அறம் உளவே அறிவானிலும்
அறிவான்நல நறுநீரொடு
சோறு கிறிபேசிநின்
றிடுவார்தொழு கேதாரமெ னீரே
என்றெல்லாம் தேவாரம் பேசியது திருக்கேதார் எனப்படும் கேதார்நாத்தை.
இந்த தேவாரப் பாடல் கல்வெட்டுகள் அனைத்துமே கேதார்நாத் கோயிலில் நம்மூர் போலவே தமிழில் கல்வெட்டுகளாகவே செதுக்கி வைக்கப்பட்டிருந்தன. வெள்ளத்தால் உருக்குலைந்த கேதார்நாத் இப்போது மீண்டெழுந்து நிற்கிறது.. அந்த அழியா வடுக்களை சுமந்தபடி!