24 வெளிநாட்டு தூதர்கள் குழு.. ஜம்மு காஷ்மீர் வந்தாச்சு.. இனி ஆய்வு தான்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக 24 நாடுகளின் தூதர்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதனால் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழலை கொண்டு வர மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகளை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் வெளிநாடுகளின் தூதர்கள் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட தூதர்கள், ராணுவத்தினர், அரசியல் தலைவர்களை சந்தித்து நிலைமையை ஆராய்ந்தனர். பின்னர் உலகமே கொரோனா பிடியில் சிக்க, இந்த பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட 20 வெளிநாட்டு தூதர்கள் 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் வந்துள்ளனர்.
இன்று ஸ்ரீநகர் வந்த தூதர்கள், அங்கிருந்து பத்காம் மாவட்டம் மகாம் பகுதிக்கு சென்றனர். அங்கு பஞ்சாயத்து அமைப்பு செயல்முறை மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கிராம மக்களின் வீடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். பின், அப்பகுதியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் மாணவர்களுடன் அவர்கள் உரையாட உள்ளனர்.
சிலி, பிரேசில், கியூபா, பொலிவியா, எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம், ஸ்பெயின், சுவீடன், இத்தாலி, பங்களாதேஷ், மலாவி, எரிட்ரியா, கோட் டி ஐவோயர், கானா, செனகல், மலேசியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தூதர்கள் வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications