2ஜி: கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கைமாறிய வழக்கு: 30ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு குறித்த உத்தரவு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவு வழக்கில் அக்டோபர் 30ம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கைமாறியதில் அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டதாக அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உட்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான விவாதம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
அப்போது, கலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடான வழியில் ரூ. 200 கோடி ரூபாய் பணம் வந்ததாக தொடர்ந்த வழக்கில் இன்று அக்டோபர் 20ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.
இதனிடையே இன்றைய தினம் இந்த வழக்கு விவசாரணைக்கு வந்த போது, 2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 31ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி ஓ,பி. சைனி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
விறுவிறுப்பாகும் 2ஜி வழக்கு
இதனிடையே டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நவம்பர் 10-ம் தேதி தொடங்கும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார். இது சி.பி.ஐ தாக்கல் செய்த வழக்கு. ஜனவரி இறுதிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வரப்போகிறது.
ஏர்செல்-மேக்ஸிஸ் குற்றப்பத்திரிக்கை
ஏர்செல் - மேக்ஸிஸ் சம்பந்தமான வழக்கின் குற்றப் பத்திரிகையும் இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அமைக்கப்பட்ட விவகாரம், சி.பி.ஐ-யின் பரிசீலனையில் இருக்கிறது.
2 ஜி யின் மையம்
மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர்களான ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகிய இருவரும் இந்த வழக்குகளின் மையப்புள்ளிகள்.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, பேரன் கலாநிதி மாறன் ஆகிய மூவரும் இந்த 2ஜி வழக்கில் சிக்கியுள்ளனர்.
2015ல் திமுக
ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் கருணாநிதி அடக்க ஒடுக்கமாக அமைதியாக இருந்ததற்கு இதுதான் முக்கிய காரணம் என்பது உலகமே அறியும். கலைஞர், சன் ஆகிய இரண்டு டி.வி-களும் இந்த வழக்குக்குள் சிக்கியுள்ளன. மொத்தத்தில் 2015-ம் ஆண்டு முழுக்க தி.மு.க-வைப் பொறுத்தவரை 2ஜி வழக்கு ஆண்டாக இருக்கப்போகிறது என்கின்றனர் டெல்லி வட்டாரங்களில். அடுத்த ஆண்டு 2 ஜி ஆண்டு என்றும் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.