இந்திய ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்.. தமிழக வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி ராணுவ முகாமில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், தமிழக வீரர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக மத்திய அரசு தரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும், சமூக வலைதள கணக்குகளில் தேசியக் கொடியை டிபியாக வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்ற வேண்டும் என்றும் பாஜக தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பாஜக தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை
அதேபோல் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டன.

எல்லையில் ஊடுருவல்
இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயன்றுள்ளனர். அவர்களை நிற்கும்படி கூறி பாதுகாப்பு படையினர் தடுத்து உள்ளனர்.

தாக்குதல்
அப்போது ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு
இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத், மனோஜ் குமார் மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் மரணமடைந்தனர் . இதில் லக்ஷ்மணன் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications