ஜாமியா போராட்டத்தில் 3 பேர் குண்டு பாய்ந்து காயம்.. மருத்துவர் தகவல்.. சுடவில்லையென போலீஸ் மறுப்பு
டெல்லி: டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை டெல்லி காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதா என்பது குறித்த சர்ச்சை வெடித்துள்ளது.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் அதனையொட்டி தென்கிழக்கு டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் காவல்துறையினரிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் ஏராளமான மாணவர்களும் போலீசாரும் காயமடைந்தனர்.
டெல்லியில் அரசு மருத்துவமனையான சஃப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில். ஜாமியாவில் போராட்டம் நடத்திய இரண்டு மாணவர்கள் புல்லட் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதனிடையே ஜாமியா போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று போலீசார் சொன்னதற்கு முரணாக உள்ளது.
தைரியம் இருந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு அமித்ஷாவை விசிட் அடிக்க சொல்லுங்கள் பார்ப்போம்.. சோனியா
சர்ச்சை வெடித்தது
இதனால் டெல்லி ஜாமியா போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்களா என்ற சர்ச்சை பெரிய அளவில் வெடித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய இரண்டு மாணவர்களும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பில் குண்டு
ஒரு மாணவரின் பெயர் அஜாஜ் வயது 22. ஜாமியா பல்கலைக்கழகத்தில் பிஏ படிக்கிறார். இப்போது துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை அஜாஜ் மார்பில் சுடப்பட்டதாக அஜாஸின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். போராட்டங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவர்கள் கூறினர்.
காலில் காயம்
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இன்னொருவரின் பெயர் சோயிப் கான் (வயது 23) என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த மாணவர்களை பார்க்க வருபவர்களை கண்காணிக்க போலீசார் இரண்டு பேர் மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு இல்லை
இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்த சர்ச்சைக்கு டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட சிறு சிறு காயங்கள் என்று போலீசார் கூறினர். இதனிடையே அஜாஜ் சுடப்பட்ட இடத்தில் எந்த கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டதாக வீடியோவில் தெரியவில்லை என்று புகார் எழுந்துள்ளது.