பாக். தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்.. உளவுத்துறை எச்சரிக்கை.. காஷ்மீர் எல்லையில் பதற்றம்
இந்தியாவுக்குள் 30 பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஸ்ரீநகர்: நாசவேலைக்கு திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் 30 பேர் இந்தியாவுக்குள் காஷ்மீர் வழியாக ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் எல்லையோர பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
அண்மையில், காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை சுட்டுக் கொன்றனர். இது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 30 பேர் ஊடுருவி இருப்பதாகவும் இவர்கள் காஷ்மீரின் மாநிலம் பூஞ்ச் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டு தீவிரவாதிகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. காஷ்மீரை ஒட்டிய அனைத்து எல்லைப்பகுதிகளிலும் ராணுவக் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வப்போது நாசவேலை சதி திட்டத்துடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவில் ஊடுருவி வருகிறார்கள். எல்லையில் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணித்து அதை முறியடித்து வருகிறார்கள் என்றாலும் ஊடுருவல் நீடிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.