37% நகர்ப்புற வாக்காளர்கள் 'ஆன்லைன்வாசிகள்'.. சொல்கிறது கூகுள் இந்தியா சர்வே!
டெல்லி: நகர்ப்புற வாக்காளர்களில் 37% பேர் பெரும்பாலான நேரங்களில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் அதாவது ஆன்லைன்வாசிகள் என்று கூகுள் இந்தியாவின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் இந்தியா நிறுவனத்துக்காக டி.என்.எஸ். ஒரு ஆய்வை மேற்கொண்டது. நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 20% தொகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இணைய பயன்பட்டாளராக, ஒரே தொகுதியில் வசிக்கக் கூடிய 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 7042 பேர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன்வாசிகள் 37% பேர்
நகர்ப்புற வாக்காளர்களில் 37% பேர் ஆன்லைன்வாசிகளாக, பெரும்பான்மையான நேரம் இணையத்தை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
85% பேர் வாக்களித்தோர்
இந்த 37% சதவீதம் பேரில் 85% பேர் முந்தைய தேர்தல்களில் வாக்களித்திருக்கின்றனர்.
18-25 வயது வரை..
இதில் 18-25 வயது வரையிலானோரில் 64% பேர் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர்.
26-35 வயது வரையிலானோர்..
26 முதல் 35 வயது வரையிலானோரில் 92% பேரும், 36-50 வயது வரையிலானோரில் 97% பேரும் 50 வயதுக்கு மேற்பட்டோரில் 99% பேரும் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர்.
குழப்பத்தில் 42% பேர்
யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யாதவர்களாக 42% நகர்ப்புற வாக்காளர்கள் இருக்கின்றனர்.
எந்த அடிப்படையில் வாக்கு?
வாக்களிக்கும் போது கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று வட இந்தியாவில் 40% பேர், கிழக்கு இந்தியாவில் 43% பேர், மத்திய இந்தியாவில் 48% பேர் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் 37%, மேற்கு இந்தியாவில் 23% பேர் கட்சி அடிப்படையில் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.
உள்ளூர் வேட்பாளர்களுக்கு..
உள்ளூர் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களிப்போம் என்பது மேற்கு இந்திய நகர்ப்புற வாக்காளர்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பிரதமர் வேட்பாளர் யார் என்ற அடிப்படையில் 11% பேரும் கட்சித் தலைவர்கள் யார் என்ற அடிப்படையில் 17% பேரும் வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
இணையம் மூலமாக முடிவு செய்வோர் 45% பேர்
நகர்ப்புற வாக்காளர்களில் 45% பேர் இணையத்தின் மூலமாக தாம் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதாவது இணையம் மூலம் விவாதங்கள், வேட்பாளரின் செயல்பாடுகள், கட்சி, அதன் தேர்தல் அறிக்கை, வேட்பாளரின் பின்னணி ஆகியவற்றை அறிந்துகொண்டு முடிவு எடுக்கிறோம் என்பது இவர்களின் கருத்து.
ஆன்லைனுக்கு அரசியல்வாதிகள் வந்தால்..
இணையதளங்களில் அரசியல்வாதிகள் வந்தால் அவர்களுடன் நேரிடையாக தொடர்பு கொண்டு விவாதிக்க 50% நகர்ப்புற வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.
'டோன் ஷேர்'
அரசியல் தொடர்பாக ஆன்லைனில் எந்த கருத்தையும் தெரிவிக்கவே மாட்டோம் என்று 65% ஆன்லைன்வாசிகள் கூறியுள்ளனர். 30% பேர் ஆன்லைனில் பகிரங்கமாக தெரிவிப்போம் என்றும் 5% பேர் மறைமுகமாக கருத்து தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
வருது வருது எலக்சன் வருது
தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பே அது பற்றிய விவரங்களை தேடுவதில், அறிவதில் மும்முரம் காட்டும் ஆன்லைன்வாசிகள் எண்ணிக்கை 35%.
மொபைல் ஆன்லைன்வாசிகள்
மொபைல் மூலமாக இணையதளத்தைப் பயன்படுத்தும் நகர்ப்புற வாக்காளர்கள் எண்ணிக்கை 36%. வீட்டில் இருந்தபடியே இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 77%.
11 மடங்கு உயர்வு
மொபைல் மூலமாக தேர்தல் தொடர்பான சேவை பயன்பாடு 11 மடங்கு உயர்ந்துள்ளது.
அதிகம் தேடப்பட்ட தலைவர்கள்
நகர்ப்புற வாக்களர்களில் ஆன்லைன்வாசிகளால் அதிகம் தேடப்பட்ட தலைவர்களில் முதலிடம் நரேந்திர மோடிக்கு. 2 முதல் 10 வது இடம் வரை ராகுல், சோனியா, மன்மோகன்சிங், கெஜ்ரிவால், ஜெயலலிதா, அகிலேஷ்யாதவ், நிதிஷ்குமார், சுஷ்மா ஸ்வராஜ், திக்விஜய்சிங் ஆகியோர் தேடப்பட்டுள்ளனர்.
கட்சிகளில்..
அதிகம் தேடப்பட்ட முதல் 5 கட்சிகள் - பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா. இவ்வாறு கூகுள் இந்தியா சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.