சவுதியில் சிக்கித் தவிக்கும் 50 கேரள நர்ஸுகள் நாடு திரும்ப துடிப்பு
திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் ஏமன் எல்லையையொட்டியுள்ள பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 50 நர்ஸுகள் நாடு திரும்ப அதிகாரிகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் எல்லையையொட்டி உள்ள சம்தா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த 50 நர்ஸுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சம்தா அருகே உள்ள ஜிசான் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கேரள மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த நர்ஸ் தனு கூறுகையில்,
கடந்த மூன்று நாட்களாக சம்தாவில் உள்ள பொது மருத்துவமனையில் பயத்துடன் இருந்தோம். சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறை நடத்தும் மருத்துவமனையைச் சுற்றி துப்பாக்கிச்சூடும், வெடிகுண்டு சப்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் 50 நர்ஸுகள் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர்.
நாங்கள் பணிபுரிந்ததற்கான அனுபவ சான்றிதழை வாங்கிக் கொடுக்க இந்திய தூதரகம் முன்வர வேண்டும். சவுதியில் பாதுகாப்பான பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய நாங்கள் தயாராக உள்ளோம். இல்லை என்றால் நாடு திரும்ப விரும்புகிறோம் என்றார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கேட்கப் போவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி நர்ஸுகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கிடையே நர்ஸுகள் பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் நர்ஸுகளை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.