வீடுகளை காலி செய்யுங்கள்: 55 முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ்
டெல்லி: தேர்தலில் தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ அலுவலக இல்லங்களை காலி செய்ய உள்ளனர். அரசுவீடுகளை காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலின் போது வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்றவர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த இல்லங்கள் மத்திய அரசின் நகர்ப்புறத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். அமைச்சர் பதவிபறிக்கப்படும் போதும், தேர்தலில் தோல்வி அடையும் போதும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இல்லங்கள் மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நியதி.
இந்நிலையில் தற்போது புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் 55 பேர்களுக்கு வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் ஜூன் 26-ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் தற்காலிகமாக தங்கி கொண்டு அலுவல் பணி செய்வதற்காக அரசுக்கு சொந்தமான அசோகா ஓட்டலில் அறைகள் ஒதுக்கப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறுகையில், புதிய அமைச்சர்கள் தங்களுக்கு ஓதுக்கப்படும் இல்லங்களில் பூஜை மற்றும் பிற காரியங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கலாம். அதனை கருத்தில் கொண்டு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் விரைவில் இல்லங்களை காலி செய்து தர வேண்டும் என கூறியுள்ளார்.
பதவி போய்விட்டால் பவர் போய்விடும் எல்லாமே போய்விடும் என்று சும்மாவா சொன்னார்கள்.