சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேருக்கு தூக்கு... அதில் 72 பேர் முஸ்லீம்கள்
டெல்லி: நாடு சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும், அதில் 72 பேர் முஸ்லீம் கைதிகள் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவது சர்ச்சையாகியுள்ள நிலையில் இந்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
யாகூப் மேமனுக்கு எதிராக பலரும், ஆதரவாக சல்மான் கான் உள்ளிட்டோரும் எதிரெதிராக நின்று வாதங்களை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த விவகாரம் மதரீதியான மற்றும் அரசியல் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
இதுவரை 1414 பேருக்குத் தூக்கு
இந்த நிலையில் டெல்லி, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மரண தண்டனை ஆய்வுத் திட்டத்தின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாடு சுதந்திரமடைந்தது முதல் இதுவரை 1414 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
72 பேர் முஸ்லீம்கள்
தூக்கிலிடப்பட்ட கைதிகளில் முஸ்லீம்கள் 72 பேர் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. மொத்த தூக்குத் தண்டனையில் இது 5 சதவீதம் என்றும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
கரையான் அரித்து விட்ட ஆவணங்கள்
கேரளாவில் எத்தனை பேருக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது என்ற விவரம் கிடைக்கவில்லையாம். காரணம் பழைய ஆவணங்களை கரையான் அரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவிலும் கரையான் தொல்லை
அதேபோல ஆந்திராவிலும் 1968க்குப் பிறகு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம் கிடைக்கவில்லை. அங்கும் கரையான் பிரச்சினை காரணம் காட்டப்பட்டுள்ளது.
பீகாரில் சுத்தம்!
பீகாரில் இதுதொடர்பான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லையாம். எந்தவிதமான முறையான ஆவணங்களும் பீகாரில் இல்லையாம்.
தமிழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை
தமிழகத்தில் இதுபோன்ற தூக்குத் தண்டனை குறித்த ஆவணங்களைப் பார்வையிட உரிய துறைகளின் அனுமதி கிடைக்கவில்லையாம்.
18 மாநிலங்களில் தண்டனையே கிடையாது
இந்தியாவின் 18 மாநிலங்களில் 1947ம் ஆண்டு முதல் இதுவரை ஒருவர் கூட தூக்கில் போடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாம்.