உ.பி.யில் கொடுமை... அலங்கார செடிகளை தின்ற 8 கழுதைகளுக்கு 4 நாள் ஜெயில் தண்டனை- வீடியோ
உத்தரப்பிரதேசத்தில் விலை உயர்ந்த அலங்கார செடிகளை தின்றதற்காக 8 கழுதைகளை 4 நாட்கள் சிறையில் அடைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
#WATCH Police release a herd of donkeys from district jail in UP's Jalaun. They had been detained for destroying plants outside jail pic.twitter.com/RkV8Hng0k2
— ANI (@ANI) November 27, 2017
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிறை வளாகத்தில் இருந்த செடிகளைத் தின்றதற்காக 8 கழுதைகளுக்கு 4 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் சிறை வளாகத்தில் விலை உயர்ந்த செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் மதிப்பு ரூ5 லட்சம் என கூறப்படுகிறது.
அழகுக்காக வைக்கப்பட்டிருந்த இந்த செடிகளை 8 கழுதைகள் மேய்ந்துவிட்டன. இதில் கடுப்பாகிப் போன சிறைத்துறை அதிகாரி கழுதைகள் மீது புகார் கொடுக்க போலீசாரும் 8 கழுதைகளை 'கைது செய்து' உராய் சிறைக்குள் அடைத்து வைத்தனர்.
இதனிடையே கழுதைகளை காணாத உரிமையாளர் கமலேஷ் அவற்றை தேடி அலைந்துள்ளார். பின்னர் உராய் சிறையில் கழுதைகள் அடைக்கப்பட்டுள்ளதைக் கேள்விபட்டு கமலேஷ் அதிர்ச்சியடைந்து போனார்.
இதனைத் தொடர்ந்து ஆளும் பாஜக பிரமுகர்கள் உதவியுடன் சிறைத் துறை அதிகாரிகளை சமாதானம் செய்தார். இதையடுத்து 8 கழுதைகளும் நேற்று உராய் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டன. கழுதைகளை சிறையில் அடைத்த கொடூர செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.