ஆர்பிஐ கவர்னரை ‘புத்திசாலித்தனமான கேள்வி’யால் ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்
மும்பை: மும்பையில் நடந்த விழாவில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் ரகுராம் ராஜன், 8ம் வகுப்பு மாணவன் எழுப்பிய கேள்வியால் ஆச்சர்யமடைந்தார். பின்னர் புத்திசாலித்தனமான கேள்வி எழுப்பிய அந்த மாணவரை அவர் பாராட்டினார்.
தனது அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருபவர் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன். இவர் மும்பையில் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பள்ளி குழந்தைகளை சந்தித்து அவர் உரையாடினார். அந்த நிகழ்ச்சியில் 8ம் வகுப்பு மாணவனான ராஜாஸ் என்ற சிறுவன், ரகுராம் ராஜனிடம் கேள்வி எழுப்பினார்.
மாணவரின் கேள்வி...
. அதாவது, ''சார், அமெரிக்காவின் பணவியல் கொள்கைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ரூபாயின் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற செய்தி பரவிவருகிறது. இதேபோல் எப்போது இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களால் உலக பொருளாதாரத்தில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்?'என்பது தான் அச்சிறுவன் கேட்டக் கேள்வி.
பாராட்டு...
இந்தக் கேள்வியைக் கேட்டு ஆச்சர்யமடைந்த ரகுராம் ராஜன், தனது கைதட்டல் மூலம் அச்சிறுவனைப் பாராட்டினார். பின்னர், ''முதலில் இந்த கேள்விக்கு பாராட்டை தெரிவித்தே ஆகவேண்டும், அமெரிக்கா பணவியல் கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் போது மற்ற நாடுகளை பாதிக்காத வண்ணம் தயாரிக்க வேண்டும்.
வளர்ச்சியை நோக்கி...
அதுமட்டுமின்றி நமது கொள்கைகள் எந்த ஒரு நாட்டையும் பாதிக்காத வண்ணம் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாட்டின் கொள்கை பிற நாடுகளைப் பாதிக்கும்போது நாம் மகிழக் கூடாது' என அவர் பதிலளித்தார்.
டாப் 3 பொருளாதாரங்களில்...
மேலும், அந்தச் சிறுவனிடம், ‘நீ எனது வயதில் இருக்கும் போது இந்திய பொருளாதாரம் உலகின் டாப் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்' என ரகுராம் ராஜன் கூறினார்.
வீடியோ...
ரகுராம் ராஜனிடம், சிறுவன் ராஜாஸ் கேள்வி கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த வீடியோவை 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.