மன அழுத்தத்தைப் போக்க சூனியம்.. 14 வயது சிறுமியின் தொண்டையில் குத்தப்பட்ட 9 ஊசிகள்..!
14 வயது சிறுமியின் தொண்டைப்பகுதியில் இருந்து 9 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளது.
Recommended Video
கொல்கத்தா: தொண்டை வலியால் அவதிப்பட்ட 14 வயது சிறுமியின் உணவுக்குழாய் பகுதியில் இருந்து 9 ஊசிகளை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் போராடி அகற்றியுள்ளனர்.
மேற்கு வங்காளம் மாநிலம் கிரிஷ்னாகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வாரம் அங்குள்ள நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தொண்டைப்பகுதியில் ஒன்பது ஊசிகள் இருந்ததை எக்ஸ்ரே மூலம் கண்டு பிடித்தனர். இதனாலேயே வாய் பேச முடியாமல் தொண்டை வலியால் அச்சிறுமி அவதிப்பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் சிறுமியின் தொண்டைப் பகுதியில் இருந்த ஒன்பது ஊசிகளையும் அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர்.
இந்த ஒன்பது ஊசிகளும் தொண்டைப்பகுதியில் உணவுக்குழாயைச் சுற்றிலும் இருந்தன. ஆனால் அவை உணவுக்குழாயில் ஊடுருவவில்லை. எனவே அவற்றை அச்சிறுமி விழுங்கியிருக்க வாய்ப்பில்லை என்பது மருத்துவர்களின் கருத்து. அந்த ஊசிகளை நிச்சயம் வெளிப்புறத்தில் இருந்தே யாரோ தொண்டையில் குத்தியிருக்கிறார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக எந்த தகவலும் கூற மறுத்துள்ளனர். ஆனால், அவர்களது அக்கம்பக்கத்தார் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், 'கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர்களது மகன் இறந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அத்தம்பதி ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளனர். அக்குழந்தையும் எதிர்பாராமல் இறந்து விடவே, குடும்பமே பெரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுமியின் மன அழுத்தத்தைப் போக்கி, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க பெற்றோர் இத்தகைய சூனியக்கார வேலைகள் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.