விஜய் செய்யும் மேஜிக்.. சட்டப்பேரவையில் புதிய மாற்றம்.. வாவ்!
தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான மாற்றத்தை குறிக்கும் வகையில், தமிழ்நாட்டின் ஆளுநர் 16வது சட்டப்பேரவையை நேற்று முன்தினம் கலைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம், 17வது சட்டப்பேரவை அமைப்பதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அவை, வெறும் ஆட்சிமாற்றத்தை மட்டுமல்லாமல், சமூக பிரதிநிதித்துவத்தில் ஒரு பெரிய மாற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
17வது தமிழக சட்டப்பேரவையின் அமைப்பு, சமூக சமநிலையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது. குறிப்பாக பெண்கள், தலித் சமூகத்தினர், சிறுபான்மையினர் ஆகியோரின் பிரதிநிதித்துவம் கணிசமாக உயர்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராமணர் சமூக பிரதிநிதிகளும் மீண்டும் அவையில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம்
புதிய சட்டப்பேரவையில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனர். கடந்த அவையில் இந்த எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில், இம்முறை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
இந்த 25 பேரில் 13 பேர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் முக்கிய அம்சமாகும். தவெக கட்சித் தலைவர் விஜய், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மேரி வில்சன், ராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த தாஹிரா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
தவெக கட்சிக்கு வெளியிலும் அதிக எண்ணிக்கையில் சிறுபான்மையினர் இடம்பெற்றுள்ளனர், பிற கட்சிகளைச் சேர்ந்த பால் மனோஜ் பாண்டியன், ஆஸ்டின் போன்றோர் அவையில் இடம்பெறுகின்றனர். மேலும், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எம்.எச். ஜவாஹிருல்லா மற்றும் தமீமுன் அன்சாரி ஆகியோரும் புதிய சட்டப்பேரவையில் இடம்பிடித்துள்ளனர்.
மொத்தத்தில், 17வது தமிழக சட்டப்பேரவையில் எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எந்த முஸ்லிம் உறுப்பினரும் இல்லாதது கவனத்தை ஈர்க்கிறது. தவெக கட்சியை தாண்டி லால்குடியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் மட்டுமே ஒரே கிறிஸ்தவ பிரதிநிதியாக உள்ளார்.
தலித் மற்றும் பழங்குடியினர்
இந்த முறை சட்டப்பேரவையில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 50 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 44 தனித்தொகுதிகளில், 24 இடங்களில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்கு மேலாக, பொதுத்தொகுதிகளிலும் தலித் வேட்பாளர்களை நிறுத்திய தவெக, அதில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விருத்தாச்சலத்தில் பி.செல்வம், நாங்குநேரியில் வி.நாராயணன் போன்றோர் முக்கிய முகங்களாகத் திகழ்கின்றனர்.
தவெக கட்சிக்கு அப்பால், மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பி.விஸ்வநாதன் பொதுத்தொகுதியில் வெற்றி பெற்று தலித் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தியுள்ளார்.
பெண்கள் மற்றும் பிராமணர்
இந்த சட்டப்பேரவையில் மொத்தம் 23 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் தளத்தில் பெண்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பிராமணர் சமூகத்தினரின் பிரதிநிதித்துவமும் மீண்டும் சட்டப்பேரவையில் தோன்றியுள்ளது. மயிலாப்பூரில் பி.வெங்கட்ராமணன் மற்றும் ஸ்ரீரங்கத்தில் ரமேஷ் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சமூக அரசியலில் புதிய அத்தியாயம்
17வது தமிழக சட்டப்பேரவை, வெறும் அரசியல் மாற்றத்தை விட சமூக அரசியலில் புதிய அத்தியாயமாக பிரதிபலிக்கிறது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சமமான இடமளிக்கும் முயற்சி 17வது தமிழக சட்டப்பேரவையில் உருவாகியிருப்பது பாராட்டுக்குரியது.
தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடு, குறிப்பாக தலித் மற்றும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை அதிகரித்த விதம், புதிய அரசியல் திசையை சுட்டிக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications