நேதாஜி பயங்கரவாதியாம்.. சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக எம்எல்ஏ.. அதுக்கு சொன்ன காரணம் இருக்கே.. ஷாக்!
காந்திநகர்: விடுதலை போராட்ட வீரரும் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து ராணுவப் படையையே உருவாக்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று நேதாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாஜக எம்எல்ஏ ஒருவர், அவரை 'பயங்கரவாதி' என்று கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தின. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நேற்று நேதாஜி பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த விழாவுக்கு நேதாஜியின் மகள் அனிதா போஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதாவது "எனது தந்தை நேதாஜி அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய ஒற்றுமையை விரும்பினார். இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளுக்கு நேரெதிராக இருக்கிறது.
இவர்கள் எனது தந்தையைின் கொள்கைகளை பின்பற்ற விரும்பலாம். ஆனால் அவர்களுடைய கொள்கையையும் நேதாஜியின் கொள்கைகளையும் ஒருபோதும் சேர்த்து பின்பற்ற முடியாது. எனது தந்தை ஒரு இடதுசாரி" என்று கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை பொருட்படுத்தாது ஆர்எஸ்எஸ் அமைப்பு அவருக்கு விழா எடுத்தது. அந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,
கொங்கில் சமகவிற்கு பங்கு இருக்கு.. ஈரோடு கிழக்கு எங்களுக்கே! மாலையே அறிவிப்பு: சரவெடியாய் சரத்குமார்
நேதாஜி=ஆர்.எஸ்.எஸ்
"சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு நாங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதேபோல அவருடைய பண்புகளை உள்வாங்குவதையும் உறுதி செய்வோம். அவர் கட்டியெழுப்ப விரும்பிய இந்தியா பற்றிய கனவு இன்னும் நிறைவேறவில்லை. அந்த கனவை நிஜமாக்க நாம் உழைக்க வேண்டும். சூழ்நிலைகள் மற்றும் பாதைகள் வேறுபடலாம், ஆனால் சேருமிடம் ஒன்றுதான். நேதாஜி முதலில் காங்கிரசுடன் இணைந்தார். அதன் பாதையான சத்தியாகிரகத்தை பின்பற்றினார். ஆனால் சுதந்திர போராட்டத்திற்கு இது போதாது என்றும் இதைவிட அதிகமான தேவை இருக்கிறது என்றும் உணர்ந்தார். எனவே அதை நோக்கி பயணித்தார்.
முரண்பாடு
எனவேதான் பாதைகள் வேறுபடலாம் ஆனால் இலக்குகள் ஒன்றுதான் என்று சொன்னேன். அவரின் லட்சியங்கள் நமக்கு முன்னால்தான் இருக்கிறது. அவர் கொண்டிருந்த இலக்குகள்தான் நம்முடைய குறிக்கோள். இந்தியா உலகிற்கு தலைமையாக (விஸ்வ குருவாக) மாற வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார். எனவே நாம் அதை நோக்கி உழைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். சுபாஷ் சந்திர போஸின் மகள் தனது தந்தையை இடதுசாரி என்று கூறிய பின்னரும் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
மறுப்பு
இதனையடுத்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சிகே போஸ், "இன்றுவரை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மதச்சார்பற்ற ஒரே தலைவர் நேதாஜி மட்டுமே. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தான் என்ன விரும்புகிறார் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நேதாஜியையும், சார்வர்க்கரையும் ஒரு பக்கத்தில் வைத்து பார்க்க முடியாது. இருவரின் கொள்கைகளும் வெவ்வேறானவை" என்று கூறியுள்ளார். இந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம் சென்றுக்கொண்டிருக்கையில் குஜராத்தின் ஆனந்த் சட்டமன்ற தொகுதி 'பாஜக' எம்எல்ஏ யோகேஷ் ஆர் படேல் புதிய பஞ்சாயத்தை உருவாக்கியிருந்தார்.
பாஜக எம்எல்ஏ
அதாவது இவர் தனது பேஸ்புக் பதிவில், "போஸ் ஆடங்குவாடி பங்கின் உறுப்பினராக இருந்தார். காங்கிரஸின் இயக்கங்களில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரது சோசலிச கொள்கைகளை ஆதரித்ததாக பரவலாக அறியப்பட்டவர்" என்று கூறியிருந்தார். இதில் 'ஆடங்குவாடி' எனும் வார்த்தைக்கு 'பயங்கரவாதி' என்று பொருள். அதாவது "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பயங்கரவாதியாக இருந்தார்" என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த பதிவு சிறிது நேரத்தில் டெலிட் செய்யப்பட்டது. இருப்பினும் படேல் இது தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆம் ஆத்மி வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து படலே மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார்.
அதில், "எனது உதவியாளர் ஆங்கிலத்திலிருந்து குஜராத்தி மொழியில் மொழிபெயர்க்க நினைத்து இப்படி தவறாக மொழிபெயர்த்துள்ளார். அவரது தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.