ஒரு தலித், ஒரு ஓபிசி, ஒரு பிராமணர்.. இது உ.பி. தேர்தலுக்கான மோடியின் ஸ்பெஷல் ஆபர்!
டெல்லி: உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு தனது அமைச்சரவை மாற்றத்தை நடத்தியுள்ளார் பிரதமர் மோடி. அவரது புதிய அமைச்சர்களில் மூன்று பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அதை விட முக்கியமானது, இவர்களில் ஒருவர் பிராமணர், ஒருவர் தலித் மற்றும் ஒருவர் பிற்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூன்று பேருமே முதல் முறையாக மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.
சந்தாலி எம்பி மகேந்திர பாண்டே பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். ஷாஜகான்பூர் எம்.பி. கிருஷ்ண ராஜ் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். மிர்ஸாபூர் எம்.பி அனுப்பிரியா படேல் குர்மி வகுப்பைச் சேர்ந்தவர், அதாவது பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
முதல் முறை...
புதிய அமைச்சர்களாகியுள்ள இந்த மூன்று பேருமே இப்போதுதான் லோக்சபாவுக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். முதல் முறையிலேயே அவர்கள் அமைச்சர்களாகவும் மாறியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல்...
உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அதை மனதில் வைத்துத்தான் உத்தரப்பிரதேசத்துக்கு அதிக அமைச்சர்களைக் கொடுத்துள்ளார் பிரதமர். அதுவும் ஜாதிக்கு ஒன்றாக நியமித்து வாக்கு வங்கிகளையும் திருப்திப்படுத்த முயன்றுள்ளார்.
லோக்சபா தேர்தல்...
அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை 2019ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக பாஜக பார்க்கிறது. காரணம் உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக அளவிலான எம்.பி தொகுதிகள் உள்ளன. எனவே இங்கு அதிக இடங்களை வெல்பவரே ஆட்சியமைக்க முடியும் என்பது முக்கியமானது.
தலித் வாக்குகள்...
கிருஷ்ணராஜ் தலித் வாக்குகளை அள்ளி வரக் கூடும் என்று பாஜக நம்புகிறது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியில் ஓட்டை போட கிருஷ்ணராஜ் என்ற அம்பை ஏவியுள்ளது பாஜக. கிருஷ்ணராஜ் பட்ட மேற்படிப்பு படித்தவர். வர்த்தகரும் கூட.
அனுப்பிரியா படேல்...
மறைந்த குர்மி தலைவர் சோனே லால் படேலின் மகள்தான் அனுப்பிரியா படேல். அப்னா தள் என்ற கட்சியைச் சேர்ந்தவர். இக்கட்சியை நிறுவியது இவரது தந்தை. 2014 சட்டசபைத் தேர்தலில் இக்கட்சிக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்து 2 இடங்கள் கிடைத்தது. அனுப்பிரியா தான் இந்த வெற்றிக்கு முக்கியமானவர். அனுப்பிரியா மூலமாக குர்மி சமூகத்தின் வாக்குகளை அள்ள முடியும் என பாஜக கணக்குப் போடுகிறது.
பிராமணர்கள்...
உத்தரப்பிரதேசத்தில் முக்கியான பிரமாணர்களின் வாக்குகளைக் கவரும் முயற்சியே பாண்டே நியமனம். வாஜ்பாய்க்குப் பிறகு பிரமாணர்களைக் கவரும் வகையிலான தலைவரை இதுவரை உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெறவில்லை. மேலும் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர் பாண்டே. அதுவும் கூட பதவியைப் பெற அவருக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.