'நோ' குலக் கல்வி முறை- புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து டெல்லியில்ல் பிரமாண்ட பேரணி!
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக் கல்வித் திட்டத்தை புகுத்த வேண்டாம் என்று கோரி டெல்லியில் நேற்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டமைப்பு பிராமண்ட பேரணியை நடத்தியது.
டெல்லி: மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
அண்மையில் மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கை ஒன்றை வெளியிட்டது. இதில், அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை தேர்வு செய்ய முடியும். மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் பட்டயப்படிப்புகளில் மட்டுமே சேர அனுமதிக்கப்படுவர். 4ம் வகுப்புக்கு பின், காட்டாய தேர்ச்சி கிடையாது என்பன உள்ளிட்டவை இடம்பெற்றருந்தன.
மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புதிய கல்விக் கொள்கை மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக இந்திய முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் சார்பில், டெல்லியில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை மண்ட அவுஸ் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். டெல்லி பல்கலைக்கழக, கல்லூரி மாணவர் அமைப்பினர், கிறிஸ்துவ கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், திராவிடர் கழகம், த.பெ.தி.க., சிபிஎம் எல் மக்கள் விடுதலை, மே 17 இயக்கம், ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறுபான்மை அமைப்புகளை சேர்ந்த கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணி ஜந்தர்மந்தரில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங், டெல்லி துணை முதல்வர் மனீஷ் சியோடியா, சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி, சிபிஐ ராஜ்ய சபா எம்பி டி.ராஜா, விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட 7 எம்பிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, நாட்டை பிளவு படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கையை பாஜக புகுத்தி வருகிறது. சமத்துவக் கல்வியை கொண்டு வர வேண்டிய இந்த கால கட்டத்தில் குலக்கல்வி முறையை கொண்டுவர முயற்சிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. அது நாட்டிற்கு ஆபத்தானது. திமுக இதனை ஒருபோதும் ஏற்காது. அதனை எதிர்த்து கடுமையாக போராடும் என்று கனிமொழி கூறினார்.