மதுக்கடைக்குள் புகுந்து.. ராவாக சரக்கடித்த குரங்கு.. அசந்து போன 'குடி'மகன்கள்.. வைரல் வீடியோ!
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் குரங்கு ஒன்று, மதுக்கடைக்குள் புகுந்து மது குடிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மதுபான கூடங்கள், மதுக்கடைகள் பெருகி விட்டன.
மது குடிப்பவர்களும் அதிகரித்து விட்டனர். பல்வேறு மாநிலங்களில் மது மூலமாக கிடைக்கும் வருமானமே இதற்கு சாட்சியாய் இருக்கிறது. சந்தைகளில் பொருட்கள் வாங்க கூடும் கூட்டத்தை கூட, மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

மத்திய பிரதேசம்
மதுக்கடைகளில் குடித்து விட்டு போதையில் அலப்பறை செய்யும் நபர்களை பார்த்திருப்பீர்கள். அறிந்திருப்பீர்கள். ஒரு குரங்கு மதுக்கடைக்கு சென்று மது குடித்ததை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு விசித்திரமான சம்பவத்தைதான் இப்போது பார்க்க போகிறோம். மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுற்றிவந்த குரங்கு
மாண்ட்லா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மதுக்கடை முன்பு குரங்கு ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்துள்ளது. மதுபான கடைக்கு அருகே தரையில் கிடக்கும் மதுபாட்டிகளில் துளிபோல் இருக்கும் மதுவை அடிக்கடி ருசி பார்த்து வந்துள்ளது. அதன்பின்னர் அந்த குரங்கு அங்கேயே சுற்றி சுற்றி வந்ததால் அதனை யாரும் விரட்டி அடிக்கவில்லை.

மதுவை குடித்த குரங்கு
ஒரு சில துளிகள் மதுவை அருந்தி அதற்கு அடிமையான குரங்கு நேராக மதுக்கடைக்குள் புகுந்து விட்டது. கடை ஊழியர்களோ, பொதுமக்களோ யாரும் அதனை விரட்டவில்லை. மதுக்கடையில் ஒரு மதுபாட்டிலை கையில் எடுக்கும் குரங்கு, மனிதர்கள் திறப்பதுபோல் அதனை திறந்து அப்படியே மடமடவென்று குடிக்க ஆரம்பிக்கிறது.

வீடியோ வைரல்
கடை ஊழியர் ஒருவர் சைட் டிஷ்ஷாக குரங்குக்கு பிஸ்கெட் கொடுக்க, அதனை கூட வாங்காமல் மதுவை ருசி பார்ப்பதிலேயே குரங்கு குறியாக இருக்கிறது. குரங்கு மது குடிப்பதை பார்த்ததும் மதுக்கடைக்கு வந்தவர்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகி விட்டது. ஆனாலும் மதுக்கடைக்குள் புகுந்த குரங்கை விரட்டி அனுப்பாமல், அதனை மது குடிக்க அனுமதித்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications