மேகி தடை எதிரொலி.. பிற நூடுல்ஸ் விற்பனை அடியோடு சரிவு
டெல்லி: அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு ரசாயனம் கலந்திருப்பதாகக் கூறி மேகி மற்றும் இன்ஸ்டண்ட் நூடுல்ஸிற்குத் தடை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து, ஒரே மாதத்தில் நூடுல்ஸ் விற்பனை 90 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது .
கடந்த மாதம் நூடுல்ஸ் விவகாரம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப் பட்டதை விட அதிக அளவு ரசாயனங்கள் கலந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து, அதற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் தடை விதிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து தனது மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை நெஸ்லே நிறுவனம் திருப்பப் பெற்றுக் கொண்டது.
விற்பனைச் சரிவு...
இந்நிலையில், மேகி மற்றும் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்களின் தடை உத்தரவால், மற்ற நூடுல்ஸ் விற்பனை 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கவலை...
இதனால் மற்ற உணவு நிறுவனங்களும் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர். இதனைக் காரணம் காட்டியே தங்களது நிறுவன தயாரிப்புகளிலும் நூடுல்ஸ் தரத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள் தொல்லைக் கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
தடை எதிரொலி...
வழக்கமாக மாதாமாதம் ரூ. 350 கோடி அளவிற்கும், ஆண்டிற்கு 4200 கோடி அளவிற்கும் வர்த்தகம் நடைபெறுமாம். ஆனால், மேகி நூடுல்ஸ் தடையைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் ரூ. 30 கோடிக்கு மட்டும் தான் வியாபாரம் ஆகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் பயம்...
காரணம் மேகி நூடுல்ஸ் ஏற்படுத்திய பயத்தில் இருந்து இன்னமும் வாடிக்கையாளர்கள் வெளியே வரவில்லை என்பது தான். எனவே, வாடிக்கையாளர்கள் அனைத்து நூடுல்ஸையும் சந்தேகிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
தொழிலாளர்களுக்கும் பாதிப்பு...
இந்தப் பிரச்சினையால் முதலாளிகள் மட்டுமின்றி, தொழிலாளிகளும் அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். மேகிக்கு தடை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்தது நினைவு கூரத்தக்கது.