மிரட்டும் எல்சி ஹெலிகாப்டர்.. மணிக்கு 268 கி.மீ வேகம்.. மாஸ் அம்சங்களுடன் களமிறங்கிய வான் அரக்கன்
ஜெய்பூர்: இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு புது வரவு ஒன்றை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்படர்கள் இன்று இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது சீன, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் அடிக்கடி உரசல் போக்குகள் நீடித்து வரும் நிலையில் இந்த புதிய வகை 'தாக்குதல் ஹெலிகாப்டர்கள்' இந்தியாவின் பலத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!
ஆதிக்கம்
ஒரு நாடு எந்த அளவு தாக்குதல் ஹெலிகாப்டரை கொண்டுள்ளது என்பதை வைத்துதான் அந்நாட்டின் விமானப்படையின் பலம் அளவிடப்படும். அந்த வகையில் உலக நாடுகளில் சக்திவாய்ந்த ஹெலிகாப்டர்களுடன் வான் வெளியில் ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாதான். இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைய இருக்கிறது. அதாவது LCH எனப்படும் புதிய வகையான லைட் காம்பாட் ஹெலிகாப்டர்களை இந்தியா களமிறக்கியுள்ளது.
பெயர்
இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த ஹெலிகாப்டர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஹெலிகாப்டரின் தரமும் அதன் வேகம் மற்றும் தாக்குதல் திறனை வைத்துதான் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் இந்த புதிய ஹெலிகாப்டர் அனைத்திலும் மாஸ் காட்டியுள்ளது. நாட்டில் முதன் முறையாக தயாரிக்கப்படும் LCH ரக ஹெலிகாப்படர்கள் இதுதான். இந்த ஹெலிகாப்டருக்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், விரைவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கான பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய ஹெலிகாப்டர்களை ராஜ்நாத்சிங் விமானப்படைக்கு அர்ப்பணித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், "இந்த புதிய ஹெலிகாப்டர்களை உருவாக்கியதன் மூலம் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் திறன் என்ன என்பதை உலக நாடுகளுக்கு நாம் தெரியப்படுத்தியுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஹெலிகாப்டர்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் HAL நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்
5.8 டன் எடை கொண்டுள்ள இது, இரட்டை என்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் மணிக்கு 268 கி.மீ. இதன் அதிகபட்சமாக 550 கி.மீ வரை பயணிக்கும். (உலகின் நம்பர் ஒன் ஹெலிகாப்டராக இருக்கும் அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரே அதிகபட்சமாக 476 கிமீதான் பயணிக்கும்). இதன் சிறப்பு அம்சமே, இரவு நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்பதுதான். மேலும், 20mm துப்பாக்கியை கொண்டிருக்கிறது. 70mm ராக்கெட் மற்றும் ஏவுகணைகளையும் இந்த ஹெலிகாப்டரிலிருந்து ஏவ முடியும். தற்போது ஒரு சில ஹெலிகாப்டர்கள்தான் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன.
தாக்குதல்
இந்த திட்டத்திற்கு ஆரம்ப கட்டமாக சுமார் ரூ.3,500 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின்படி தயராகும் ஹெலிகாப்டர்களில் 95 இந்திய ராணுவத்திற்கும், 65 இந்திய விமான படைக்கும் ஒப்படைக்கப்படும். தற்போது சீனாவுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே இரு நாட்டு எல்லை அமைந்துள்ள உயரமான மலைத் தொடர்களில் எதிரிகளின் பதுங்கு குழிகள், ராணவு முகாம்கள், டாங்கிகள் ஆகியவற்றை தாக்கி அழிக்க இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.
அந்த வகையில் இந்த ஹெலிகாப்டர்கள் அதிக உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹெலிகாப்டர்களை தயாரித்ததன் மூலம், வான் பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.