'தங்கையை' அமைச்சராக்கி பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த மோடி
டெல்லி: தனது 'சகோதரிக்கு' அமைச்சர் பதவி அளித்ததன் மூலம், காங்கிரசின் பிரியங்கா காந்திக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நரேந்திரமோடி.உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து பாஜகவின் முன்னணி தலைவர்கள் அத்தொகுதியில் போட்டியிட முன்வரவில்லை.
நான் முன்வருகிறேன்
அப்போது மோடி டீமில் ஆபத்துதவியாக வந்தவர்தான் ஸ்மிருதி இராணி. தொலைக்காட்சி நடிகையும் ராஜ்யசபா எம்.பியுமான அவர் நான் போட்டியிடுகிறேன் என்று முன்னுக்கு வந்தார். ராகுல்காந்திக்கு எதிராக களம் கண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சகோதரி காப்பாற்று
மக்கள் ஆதரவு ஸ்மிருதி இரானி பக்கம் செல்வதை உணர்ந்த ராகுல்காந்திக்கு உள்ளூர அச்சம் எழ ஆரம்பித்தது. நேரு குடும்பத்தை சேர்ந்த, தான், தேர்தலில் தோல்வியடைந்தால் அது கட்சி அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை ராகுல்காந்தி உணர்ந்திருந்தார். அப்போதுதான் 'நான் இருக்கிறேன் சகோதரா' என்று ராகுல் சகோதரி, பிரியங்கா காந்தி பிரச்சார களத்தில் குதித்தார்.
ஸ்மிருதியா அப்படின்னா யாரு?
வெளியில் இருந்து வந்த ஸ்மிருதி இராணியை வெற்றி பெறச்செய்யாதீர்கள் என்று பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். இதற்கு ஸ்மிருதி இராணியும் பிரச்சாரத்தில் பதிலடி கொடுத்தார். இராணியின் தாக்குதல் பிரச்சாரம் குறித்து நிருபர்கள் பிரியங்கா காந்தியிடம் கேட்டபோது, "யார் அவர் ஸ்மிருதி இராணி" என சிரித்தபடி அலட்சியமாக கேள்வி கேட்டார்.
ஸ்மிருதி எனது சகோதரி
பிரியங்கா காந்தியின் இந்த வார்த்தை பாஜக தொண்டர்கள் மனதில் ஆறாத ரணமாக மாறியது. அமேதி தொகுதியில் இராணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திர மோடி, "ஸ்மிருதி இராணியை யார் என்றா கேட்டீர்கள். இப்போது தெரிந்து கொள்ளுங்கள், அவர் என் சகோதரி" என்று மார்தட்டி கூறினார்.
வீரத்துக்கு பரிசு
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதினத்தன்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஸ்மிருதி இராணிக்கும் அமைச்சர் பதவி அளித்து கவுரவிக்கப்பட்டது. தேர்தலில் தோற்றாலும்கூட அமைச்சராகி இளம் அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ராகுலை எதிர்த்து தீரத்துடன் போராடியதுதான் மோடியின் பரிசுக்கு காரணம்.
பாஜக-காங். மீண்டும் மோதல்
இதனிடையே ஸ்மிருதி இராணி அமைச்சராக பதவியேற்றதும், சமூக வலைத்தளங்களில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜகவினர் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். "இப்போது பிரியங்கா தெரிந்துகொள்வார் யார் ஸ்மிருதி இராணி என்று" என்கிற ரேஞ்சுக்கு அவர்கள் கமெண்ட் போட்டு தாக்கி வருகிறார்கள். இதனால் கடுப்பாகி போன காங்கிரசார், பிளஸ் டூ படித்த ஸ்மிருதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சராக நியமித்துள்ள அநியாயத்தை பாரீர்.. பாரீர் என்று மீண்டும் ஸ்மிருதியை குறிவைத்து தாக்கிவருகிறார்கள்.