என்ன கொடுமை சார் இது.. சசிகலாவைப் பார்க்க இனி ஆதார் கார்டு காட்ட வேண்டுமாம்!
சிறையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை பார்க்க வருவோர் கட்டாயம் தங்கள் ஆதார் அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூர்: சிறையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், குடும்பத்தினர் தங்களது ஆதார் அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக மாநில அரசு செயல்படுத்தவுள்ளது.
ஆதார் என்ற 12 இலக்க எண்ணை மத்திய அரசின் திட்டங்களுடன் செயல்படுத்துவதால் போலிகளும், மோசடிகளும் அம்பலமாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
மேலும் சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு விடுவதால் அரசுக்கு ஏராளமான கோடி ரூபாய் மிச்சமாவதாகவும் கூறப்படுகிறது.

ஆதார் எண் அவசியம்
இதனால் மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளும் வரும் ஜூன் மாதத்துக்குள் ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதால் சில மாநிலங்களில் அந்த திட்டத்தில் பயன்பெறாமலேயே அவர்கள் பயன்பெற்றதாக அதிகாரிகள் கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அனைத்துக்கும் ஆதார்
இதனால் வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் பெறுவது உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது சிறை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளை சந்திக்க வரும் நண்பர்கள் மற்றும உறவினர்களின் ஆதார் எண்ணை கட்டாயம் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை
இதற்கான சுற்றறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் மாநில உள்துறை அமைச்சகங்களுக்கு அனுப்பியுள்ளது. இதை கர்நாடக அரசு செயல்படுத்தவுள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநிலங்களில் உள்ள சிறைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு முறை மட்டும் அனுமதிக்கப்படும்
இதை உடனடியாக அமல்படுத்தவும், கைதிகளை காண வருவோர் கட்டாயம் பதிவேட்டில் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்றும் ஒரு முறைக்கு மேல் ஆதார் எண் இல்லாமல் வருவோரை கைதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சசிகலாவை சந்திக்க...
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை காண வரும் கட்சியினரும், உறவினர்களும் இனி ஆதார் எண் இருந்தால்தான் சந்திக்க முடியும்.












Click it and Unblock the Notifications