ஆம் ஆத்மியை அபாயத்தில் சிக்க வைத்த அரவிந்த் கேஜ்ரிவாலின் 'அந்தர் பல்டிகள்'
டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு முடிவையும் ஒழுங்காக செயல்படுத்தாமல், அகலக்கால் வைப்பதுதான் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். சமீபகால அரசியல் வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் எழுச்சி பெற்ற கட்சியும், வீழ்ச்சியடைந்த கட்சியும் எது என்றால் அது ஆம் ஆத்மியாகத்தான் இருக்க முடியும். ஊழலுக்கு எதிரான கோஷம்தான் ஆம் ஆத்மி என்ற கட்சிக்கு உரம் என்றபோதிலும், ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் அடிப்படை தேவைகளை கவனிக்கவில்லை என்பது அக்கட்சியின் தோல்விக்கு கூறப்படும் காரணங்களில் ஒன்று.
வந்தார் அவதார்
அன்னா ஹசாரேவின் குழுவில் இருந்து அரசியல் அமைப்பாக ஆம் ஆத்மியை மாற்றிய அரவிந்த் கேஜ்ரிவால், ஊழலை ஒழிக்க வந்த அவதார புருசனைப்போல டெல்லி மக்களுக்கு காட்சி தந்தார். இருப்பினும் மோடி நிர்வாகத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இருந்ததால் பாஜகவும், ஆம் ஆத்மிக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஏறத்தாழ சமமாக வாக்களித்தனர் டெல்லிவாலாக்கள். இதனால் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், ஊழலின் ஊற்றுக்கண் என்று தினமும் தான் வர்ணித்த காங்கிரசுடனேயே கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால். அப்போதே அவரது பேச்சின் மீதான நம்பிக்கையை பாதி மக்கள் இழந்துவிட்டனர்.
வாயால் கெட்ட கேஜ்ரிவால்
அப்போதும், சும்மா இல்லாமல் இலவச குடிநீர் தருகிறேன், வெட்டு இல்லாத மின்சாரம் தருகிறேன் என்று நடைமுறை தெரியாமல், வாயைவிட்டு மாட்டிக்கொண்டார். இவரது அதிரடிக்கு இணங்குவார்களா அரசு அதிகாரிகள். குடிநீர் வாரிய அதிகாரிகள் குழாயை அடைத்துவிட, மின்சார வாரிய அதிகாரிகள், கரண்ட் கம்பியை வெட்டிவிட திருதிருவென விழித்தார் அரவிந்த் கேஜ்ரிவால். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போன அவப்பெயரை சம்பாதித்ததுதான் மிச்சம்.
முதல்ல இதைப்பாருங்கள்
கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தபோது டெல்லியில் கடும் குளிர்காலம். குடிசை பகுதிகளில் வசித்த மக்கள் போர்வையின்றி குளிருக்கு மடிந்தனர். ஆனால் அரவிந்த் கேஜ்ரிவாலோ, ஜனலோக்பால் மசோதா பற்றியே பேசிவந்தார். சாகக்கிடப்பவனுக்கு தண்ணீர் கொடுக்காமல், நதிநீர் இணைப்பு குறித்து ஒருவர் பேசிக்கொண்டிருந்தால் அவரை எப்படி மக்கள் பார்ப்பார்களோ, அதே பார்வைக்கு கேஜ்ரிவால் உள்ளானார்.
இவரை நம்பினால் தெருவில் நிறுத்திவிடுவார்
ஆட்சிக்கு வந்த 49 நாட்களிலேயே ஜனலோக்பால், சட்டத்தை நிறைவேற்ற பாஜக, காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி வாராத வந்த மாமணியாய் கிடைத்த ஆட்சியை 'தியாகம்' செய்தார் கேஜ்ரிவால். ஊழலுக்கு எதிராக ஒரு உத்தம புருஷன் கிடைத்துவிட்டான் என்று நினைத்து டெல்லி மக்கள் ஆம் ஆத்மியை அறுதி பெரும்பான்மையோடு ஆட்சிக்கு கொண்டுவருவார்கள் என்பது அமைச்சரவையை கலைத்த கேஜ்ரிவால் உத்தேசம். ஆனால், இவரை நம்பினால் தெருவில் நிறுத்துவிடுவார் என்று டெல்லி மக்கள் நினைக்க தொடங்கியதன் விளைவுதான், நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி டெல்லியில் பெற்ற முட்டைக்கு காரணம்.
ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்..
டெல்லி தேர்தல் முடிவே இப்படியென்றால், பிற இடங்களில் நிலைமை படுமோசமாகிவிட்டது. அத்தோடு மாறுவார் என்று பார்த்தால் தனது அரசியல் ஸ்டண்டுகளை தொடர்ந்து வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். மானநஷ்ட வழக்கில் ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி ஜாமீனில் வெளியே வரமாட்டேன் என்று வைராக்கியம் காண்பித்து வாண்டடாக ஜெயிலுக்கு போன, கேஜ்ரிவால், சில நாள் சிறைவாசத்திலேயே தனது நிலைப்பாட்டை மாற்றி பிணைத்தொகையை செலுத்தி வெளியே வந்துவிட்டார். அந்தந்த நேரத்துக்கு ஆம் ஆத்மி கட்சியினரை தூண்டிவிட அவரது நடவடிக்கைகள் உதவிகரமாக உள்ளனவே தவிர, கட்சிக்கு ஏற்படும் பின்விளைவுகள் மோசமாக உள்ளன. முன்னுக்கு பின் முரணாக நடந்துகொள்ளும் கேஜ்ரிவாலுடன் அரசியல் பயணத்தை தொடர்தால் உள்ள மரியாதையும் போய்விடும் என்பதை உணர்ந்து சில பெரிய தலைகள் வெளியே நடையை கட்டிவிட்டன.
டெல்லியை கைப்பற்ற 'மிஷன் 100'
இந்நிலையில்தான், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். தனக்கு செல்வாக்குள்ள டெல்லி, சண்டீகர் மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் கட்சியை வளர்க்க திட்டமிட்டுள்ளார். வரும் அக்டோபரில் நடைபெற உள்ள டெல்லி சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மியை அறுதி பெரும்பான்மையோடு ஆட்சி கட்டிலில் அமர்த்துவதும் குறிக்கோள்தான், கனவிலும், நினைவிலும் அரவிந்த் கேஜ்ரிவாலை வாட்டி வருகிறது. இதற்காக மிஷன் 100 என்ற பிரச்சார யுக்தியை கையிலெடுத்துள்ளது ஆம் ஆத்மி. டெல்லியில் அடுத்த நூறு நாட்களுக்கு வீடுவீடாக சென்று ஆம் ஆத்மிக்கு ஆதரவு கேட்பதுதான் இதன் நோக்கம்.