கெஜ்ரிவால் ஷாக் எதிரொலி... கரண்ட் கட்டணத்தைக் குறைக்க மகா. அரசுக்கு எதிராக காங். போராட்டம்
மும்பை: டெல்லியில் கெஜ்ரிவால் அரசு மின்சாரக் கட்டணத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி காங்கிரஸார் போராட்டத்தில் குதித்துள்ளனர். என்ன காமெடி என்றால் மகாராஷ்டிராவில் நடந்து வருவது காங்கிரஸ் அரசு என்பதுதான்.
மகாராஷ்டிர காங்கிரஸ் எம்.பிக்களான சஞ்சய் நிருபம், பிரியா தத் ஆகியோர் மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி திங்கள்கிழமையன்று மும்பையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கண்டிவிலி பகுதியில் உள்ள ரிலையன்ஸ் மின்சார அலுவலகத்தை நோக்கி பேரணியாகப் போகப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மும்பை மக்களுக்கு மின்சார மானியத்தை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியில் சமீபத்தில் மின் கட்டணத்தைக் குறைத்து கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டார். இதை அவர் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார். அதை நிறைவேற்றி டெல்லி மக்களைக் கவர்ந்து விட்டார். இதையடுத்து மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் அரசு மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸாரே குதித்துள்ளனர்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்தப் போவதாகவும் நிருபம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லியால் முடிகிறபோது ஏன் மும்பைக்காக மகாராஷ்டிர அரசு இதைச் செய்யக் கூடாது என்று கேட்டார். இதுதொடர்பாக முதல்வர் பிருத்விராஜ் செளகானுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications