விவசாயி தற்கொலை.. பழியில் இருந்து பாஜகவை 'காப்பாற்றிய' காங்கிரஸ்!
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே பெரும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதால், ஆளும் பாஜகவுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
பாஜக அரசு கொண்டுவரும் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக விவசாயிகளை ஒன்றுதிரட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இழந்த தனது செல்வாக்கை விவசாயிகள் மத்தியில் திரும்ப பெறலாம் என்ற சுயநலமும் அதில் உள்ளது.
காங்கிரஸ் சார்பில் கூட்டம்
இதை கருத்தில் கொண்டுதான், ஞாயிற்றுக்கிழமை, டெல்லி ராம்லீலா மைதானத்தில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி தனது பராக்கிரமத்தை பறைசாற்றியது காங்கிரஸ். அதில் ராகுல்காந்தி மிக ஆக்ரோஷமாக பேசி கைதட்டல் வாங்கினார்.
தொடர் தாக்குதல்கள்
இதற்கு மறுநாளே, நாடாளுமன்றத்திலும், மசோதா மீதான விவாதத்தில் ராகுல்காந்தி, மோடி அரசை மிக கடுமையாக சாடினார். காங்கிரசாரே ராகுல் அட்டாக்கை எதிர்பார்க்காமல் வாயடைத்தனர். அந்த அளவுக்கு நில மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் மிகவும் வலுவாக உள்ளது. விவசாயிகளின் ஒட்டுமொத்த ஆதரவை சம்பாதிக்க முயலுகிறது.
இதோ, ஆம் ஆத்மி வந்தாச்சு
இந்நிலையில்தான், அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. டெல்லியில் இன்று பிரமாண்டமான முறையில் விவசாயிகள் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மேலும், பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகளை திரட்டி போராடுவோம் என்றும் கேஜ்ரிவால் அறிவித்தார். இதனால் காங்கிரசுக்கு வயிற்றில் புளி கரைக்கப்பட்டது. தனது வாக்கு வங்கியி்ல் கேஜ்ரிவால் கை வைத்துவிடுவார் என்று கை கூடாரத்தில் சலசலப்பு தோன்றியது.
விவசாயி தற்கொலை
இந்நிலையில்தான், துரதிருஷ்டவசமாக, டெல்லி விவசாயிகள் பேரணியின்போது ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம், பாஜகவின் நில ஆர்ஜித சட்டத்திற்கு எதிரான புரட்சியின் விதையாக மாறும் என்று ஆம் ஆத்மி எண்ணியது. ஆனால், குறுக்கே புகுந்து ஆட்டத்தை கலைத்துவிட்டது காங்கிரஸ்.
ஆட்டத்தை கலைத்த காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் அஜய் மாக்கன், சச்சின் பைலட் போன்றோர், விவசாயி தற்கொலை சம்பவத்திற்காக ஆம் ஆத்மியை கண்டித்துள்ளனர். விவசாயி தூக்கில் தொங்கிய பிறகும், ஆம் ஆத்மி தனது பேரணியை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளது சரியில்லை என்றும், ஆம் ஆத்மி ஒழுங்காக பேரணியை நடத்தியிருந்தால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது என்றும் குறைபட்டுள்ளனர்.
பாஜக எஸ்கேப்
எனவே இந்த நிகழ்ச்சியால் காங்கிரசும், ஆம் ஆத்மியும்தான் முட்டிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக கழும் மீனில் நழுவும் மீனாக தப்பிவிட்டது. நில ஆர்ஜித பிரச்சினை மறைந்து, அரசியல் போட்டியாகவே, இது மாறும் சூழல் உருவாகியுள்ளது.