நழுவவிட்டுவிட்டு உணர்ந்த பாஜக.. வாரிசை "தூக்க" எதிர்க்கட்சிகள் வியூகம்!.. என்ன முடிவு எடுப்பாரோ?
பனாஜி: கோவா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கரை பாஜக சீட் கொடுக்காமல் நழுவ விட்டுவிட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது. இந்த மாநில சட்டசபையின் பெரும்பான்மை பலம் 21 ஆகும்.
5 மாநில தேர்தல்: பிரசார பேரணி, பொது கூட்டம் நடத்த 31-ந்தேதி வரை தடை.. சில தளர்வுகளும் அறிவிப்பு
இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உள்ளூர் கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.
காலமானார் மனோகர் பாரிக்கர்
இந்த நிலையில் மனோகர் பாரிக்கர் கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் இருந்து வருகிறார். இந்த மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் கோவா சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 40 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என 4 முனை போட்டி நிலவுகிறது.
பனாஜி சட்டசபை தொகுதி
இந்த நிலையில் தனது தந்தை மனோகர் பாரிக்கர் போட்டியிட்டு தேர்வான பனாஜி தொகுதியை தனக்கு வழங்குமாறு அவரது மகன் உத்பால் பாரிக்கர் பாஜக தலைமையிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நேற்றைய தினம் கோவா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜக அறிவித்தது. அதில் பனாஜி தொகுதி தற்போதைய எம்எல்ஏ அடானாசியோ மான்ஸேரேட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அதிருப்தி அடைந்த உத்பால்
இதனால் உத்பால் பாரிக்கர் அதிருப்தி அடைந்தார். பின்னர் பாஜகவிலிருந்து விலகுவதாக இன்றைய தினம் அறிவித்துள்ளார். மேலும் பனாஜி தொகுதியில் தனித்து போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மனோகர் பாரிக்கர் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் கடுமையாக உழைத்ததை அனைவரும் அறிவர். கோவா முதல்வரான பிறகு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்ட போது கூட மூக்கில் டியூபுடன் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டார். தனது இறுதி மூச்சு வரை கட்சிக்காகவும் மக்களுக்காகவும் கடுமையாக உழைத்தார்.
சேவைகள்
இந்த நிலையில் மனோகர் பாரிக்கரின் சேவைகள் கோவா மக்கள் மனதில் இருக்கும் நிலையில் அவரது மகன் உத்பாலை பாஜக நழுவவிட்டது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால், பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் ஆம் ஆத்மியில் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அதே போல் சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், உத்பால் பாரிக்கர் கோவா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதும் போட்டியிடாததும் அவருடைய விருப்பம். அவரது குடும்பம் கோவாவில் பாஜக கால் பதிக்க நிறைய பங்காற்றியுள்ளனர். எனவே உத்பால் சுயேச்சையாக போட்டியிட்டால் அவரை நாங்கள் ஆதரிக்க தயார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சமரச பேச்சுவார்த்தை
அது போல் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உத்பாலுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து உத்பால் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. உத்பாலுக்கு இருக்கும் டிமாண்டை உணர்ந்த பாஜக, தற்போது அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே உத்பாலை முதலில் நழுவவிட்டுவிட்டு தற்போது சமரசம் செய்து வருகிறது. உத்பால் என்ன முடிவு எடுப்பார் என்பது இனிதான் தெரியும்.