புத்திர பாசம், வாரிசு அரசியல்.. மகாராஷ்டிராவில் மொத்த குழப்பத்திற்கும் இதுவே காரணம்.. விளாசும் பாஜக
மும்பை: வாரிசு அரசியலால்தான், இப்போது மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நிலவுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால், ஆளுநர் அழைப்பு விடுத்தும் கூட போதிய அளவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி அமைக்க தயாரில்லை என்று பாஜக இன்று, அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அபிஷேக் திரிபாதி கூறுகையில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியை ஆதரித்த மகாராஷ்டிர மக்களை நாங்கள் கை விடுவது போன்ற சூழ்நிலையை சிவசேனா ஏற்படுத்திவிட்டது. தேர்தலுக்கு முன்பாக சிவசேனாவுக்கு முதல்வர் பதவி அளிப்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் திடீரென இப்போது அந்த பிரச்சினை கிளப்பப்பட்டது.
ஒருவேளை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் பதவியை பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தால், தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்லது வேறு எந்த சூழ்நிலையிலாவது சிவசேனா, அதை, வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எங்குமே அது சொல்லியதே கிடையாது.
மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்குபெற்றார். அப்போதும்கூட சிவசேனாவுக்கு முதல்வர் பதவி மீதான ஆசை தொடர்பாக எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் இப்போது புத்திர பாசத்தால் இத்தனை அரசியல் குழப்பத்திற்கும் உத்தவ் தாக்கரே காரணமாகியுள்ளார்.
அவமானப்பட வேண்டாம்.. எடியூரப்பா தந்த அனுபவம்.. மகாராஷ்டிராவில் பாஜகவின் முடிவிற்கு என்ன காரணம்?
உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி உள்ளார். அவருக்கு முதல்வர் பதவியைப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்பதற்காக மொத்த மகாராஷ்டிரா மக்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார் உத்தவ் தாக்கரே. ஒருவேளை சிவசேனா சார்பில் ஒருவர் முதல்வராக வேண்டும் என்றால் அந்த கட்சியில் வேறு சீனியர் தலைவர்கள் இருக்கிறார்களே? அவர்களை எல்லாம் விட்டுவிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாகியுள்ள ஆதித்திய தாக்கரேவை முதல்வராக்க வேண்டும் என்றால், அது மகன் பாசத்தில் தான். மொத்த அரசியல் குழப்பத்திற்கும் இதுதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.