இந்தியாவில் மீண்டும் எமெர்ஜென்சி நிலை வரலாம்.. அத்வானி ஊதிய அபாய சங்கு!
டெல்லி: இந்தியாவில் மீண்டும் எமர்ஜென்சி நிலை உருவாக வாய்ப்புள்ளதாக கருதுவதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திராகாந்தி சாலையில் எமெர்ஜென்சி நிலையை பிரகடனப்படுத்தி, அனைத்து சுதந்திரமும் பறிக்கப்பட்டது. பல தலைவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். எமெர்ஜென்சி நிலை பிறப்பிக்கப்பட்டு தற்போது 40 ஆண்டுகாலம் (1975-ஜூன் 25ம் தேதி எமெர்ஜென்சி பிரகடனம்) ஆகும் நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆங்கில பத்திரிகையொன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பரபரப்பானவையாக உள்ளன.
அதே நிலை
அத்வானி கூறியுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில், ஜனநாயகத்தை அழிக்க கூடிய, அரசியல் சாசனம் மற்றும் சட்ட வரையறைக்குள் நிற்காத சக்திகள் பலம் பெற்றுள்ளன. 1975ம் ஆண்டு எமெர்ஜென்சி நிலைக்கு பிறகும், அதேபோன்ற அரசியல் கட்டமைப்புதான் தொடருகிறது.
நம்பிக்கையில்லை
குடிமை சுதந்திரம் அழிக்கப்படவோ அல்லது நிறுத்தப்படவோ இனிமேல் வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கையை எனக்கு எதுவுமே இதுவரை அளிக்கவில்லை. 1975 முதல் 1977வரையிலான எமெர்ஜென்சி காலத்தில் இருந்த அந்த அடிப்படை நிலை இன்னமும் மாறவில்லை.
ஈசியில்லை
அதேநேரம், எமெர்ஜென்சி நிலையை யாரும் எளிதில் கொண்டுவந்துவிட முடியாது என்பது உண்மை. ஆனால், மீண்டும் அந்த நிலை ஏற்படாது என்று சொல்வதற்கில்லை. அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட வாய்ப்பு திறந்தே உள்ளது. இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
ஏன் சந்தேகம்
ஏன் எமெர்ஜென்சி நிலை மீண்டும் வரும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு "ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற உறுதி குறைந்துள்ளது. எமெர்ஜென்சி மீண்டும் வராது என்று நம்பும் அளவுக்கு எந்த திடமான நடவடிக்கையையும் நான் பார்க்கவில்லை. எனவேதான் நான் சந்தேகிக்கிறேன்.
உறுதியில்லை
இந்தியாவின் அரசியல் தலைமை பக்குவமற்றது என்று நான் கூறவில்லை. ஆனால், தற்போதுள்ள அரசியல் சிஸ்டம் மீது எனக்கு முழு நம்பிக்கையில்லை. எனவேதான், எமெர்ஜென்சி நிலை மீண்டும் வராது என்று உறுதியாக என்னால் கூற முடியவில்லை.
வரலாற்று பாடம்
எமெர்ஜென்சியை கொண்டுவந்த கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் மிக மோசமாக தோற்றது வரலாறு. எனவே, எமெர்ஜென்சி பற்றி நினைப்பவர்களுக்கு அந்த வரலாறு ஒரு பாடமாக இருக்கும். இவ்வாறு அத்வானி தெரிவித்தார்.
மோடிக்கு நெருக்கடி
மத்தியில் தற்போது மோடி தலைமையிலான பாஜக அரசு முழு பெரும்பான்மையுடன் அமைந்துள்ளது. எனவே, அவர்கள் நினைத்ததை நடத்திவிடலாம், அதில் எமெர்ஜென்சி நிலையும் ஒன்று என்று அத்வானி மறைமுகமாக தெரிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேநேரம், பாஜகவில் எந்த முக்கிய பொறுப்பும் தரப்படாமல் உள்ள அத்வானி, அதற்கு காரணமான, மோடி தலைமையிலான புதிய அணியினரை சிக்கலில் மாட்டி வைக்க இப்படி பேட்டி கொடுத்திருக்கவும் வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் சில விமர்சகர்கள் கருதுகிறார்கள்.