பாபர் மசூதி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்.. அத்வானிக்கு 5 ஆண்டு சிறை கிடைக்கும்!
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் அபாயம் உள்ளது.
குறைந்தது 2 ஆண்டு சிறைத் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிகபட்சம் 5 ஆண்டு வரை கிடைக்கலாமாம். இதற்குக் காரணம் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், சட்டப் பிரிவுகளும்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மீதான கூட்டுச் சதி குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1992 முதல் இழுபறி
1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. ரேபரேலி கோர்ட்டில் நடந்த விசாரணைக்குப் பிறகு அத்வானி உள்ளிட்ட அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
அலகாபாத் ஹைகோர்ட்டிலும் விடுதலை
அங்கும் இந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அத்வானி உள்ளிட்டோர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதேசமயம், கூட்டு சதி வழக்கிலிருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருக்க கூடாது, இந்த வழக்கை திரும்ப விசாரிக்க வேண்டும் என்று கூறி, இவர்களின் விடுதலையை எதிர்த்து சிபிஐ, உச்சநீதிமன்றத்தை அணுகியது.
ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிரடி தீர்ப்பை அளித்தது. அதில் அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்களை மறுபடியும் விசாரிக்க உத்தரவிட்டது. 25 வருடமாக ஒரு வழக்கில் முடிவு வரவில்லை என்பது வழக்கு தொடர்ந்தவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே 2 வருடத்திற்குள் இந்த வழக்கை மீண்டும் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று லக்னோ மற்றும் ரேபரலி நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.
பெரும் சிக்கல்
அத்வானி மீதான வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளதால் அவரை ஜனாதிபதியாக்கும் பாஜக கனவில் மண் விழுந்துள்ளது. தற்போது அத்வானிக்கு வேறு மாதிரியான சிக்கல் வந்துள்ளது. அதாவது அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
வலுவான குற்றச்சாட்டுகள்
அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. மதப் பிரிவுகளுக்கு இடையே பகையை மூட்டுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகள் அவர் மீது போடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வரை கிடைக்கும்.
மதத்தை அவமதித்தல்
இதேபோல மத வழிபாட்டுத் தலத்தை உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே அவமதித்தல், அதை தாக்கி மனங்களைப் புண்படுத்துதல் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்குமாம். இதுதவிர மேலும் சில குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அவற்றுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வரை கிடைக்குமாம். மொத்தமாக அத்வானி உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
யார் யார்?
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள்: சம்பத் ராய் பன்சால், சதீஷ் பிரதான், தரம் தாஸ், மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், மஹமத்லேஸ்வர் ஜகதீஷ் முனி, ராம் பிலாஸ் வேதாந்தி, வைகுந்த் லால் சர்மா, சதீஷ் சந்திர நகர்.