ஜியோ சிம் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையானை வேண்டிய முகேஷ் அம்பானி
திருப்பதி: ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஜியோ திட்டம் சிறந்த முறையில் வெற்றி பெற வேண்டும் என்று முகேஷ் அம்பானி திருமலைக்கு வந்து . ஏழுமலையானிடம் வேண்டியுள்ளார்.
செப்டம்பர் 5ஆம் தேதிமுதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு கொண்டுவரவிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது, இந்திய நாட்டின் 10 சதவிகித வாடிக்கையாளர்களை தனதாக்கிவிட்டது. இதனால் பங்குச்சந்தையில் முதலில் அடிவாங்கியிருப்பது ஏர்டெல் மற்றும் ஐடியா டெலிகாம்ஸ்.
முகேஷ் அம்பானி, ஜியோ சிம் கார்டுகளை அறிமுகப்படுத்திப் பேசியபோது வெளிப்பட்ட வார்த்தைகளில் மிக முக்கியமானது 'டிஜிட்டல் ஆக்ஸிஜன்'. அத்தனைக்கும் உண்மையான வார்த்தை அது என்பது மக்கள் அறிந்ததே.
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மனதில்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பிரதமருக்கும், இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். உலகமே டிஜிட்டலாக மாறி வருகிறது, காலத்துக்கேற்ப நாமும் மாற வேண்டும். நீங்கள் டிஜிட்டல் உலகில் இல்லையெனில், வாழ்க்கையில் பின்தங்க நேரிடும்.
இவ்வுலகில் வாழ்க்கை மட்டுமே முக்கியம், அதைவிட ஒன்று நமக்குப் பெரியதாக இருக்காது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு ஆக்சிஜன் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே டிஜிட்டல் உலகில் டேட்டா மிக முக்கியம். டிஜிட்டல் உலகில் டேட்டாதான் ஆக்சிஜன். அதற்காகவே எங்களின் படைப்பாக உருவாகியுள்ளது ஜியோ என்று கூறியிருக்கிறார்.
செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஜியோ தனது சேவையைத் தொடங்குகிறது. இந்த ஆண்டின் டிசம்பர் 31 வரை வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டும் முற்றிலும் இலவசம்.
அதன்பிறகு ஜியோ பயன்படுத்தினால், வாய்ஸ் காலிங் அல்லது டேட்டா இரண்டில் ஒன்றுக்கு மட்டும் பணம் செலுத்தினால்போதும். மற்றொன்று இலவசம்.
இந்தியா முழுக்க, ரோமிங் கட்டணமே கிடையாது. 1எம்பி டேட்டாவின் விலை 5 பைசா என 1 ஜிபி டேட்டா 50 ரூபாய் மட்டுமே. ஜியோ சார்பாக, இந்தியா முழுக்க, பொது இடங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்த முடிவுசெய்துள்ளது.
மாணவர்களுக்கென்றே ஜியோ சிறப்பு சலுகையை வழங்குகிறது. ID கார்டை வைத்திருந்தால் மாணவர்களின் டேட்டா விலையில் 25% சலுகையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அம்பானி, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 90% இந்திய மக்கள் பயன்படுத்துவது ஜியோவாகத்தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி வியாழக்கிழமையன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தார். பின்னர் கார் மூலம் திருமலைக்கு பத்மாவதி விருந்தினர் மாளிக்கைக்கு வந்தார். அங்கு ஓய்வு எடுத்துவிட்டு இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்பு பிரசாதம் அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி கூறுகையில், புதிதாக ரிலையன்ஸ் சார்பில் ஜியோ சிம்கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்ததாக கூறினார்.