பசுக்களை பாதுகாக்கும் பாஜக ஆட்சியில்.. இப்படியொரு பயங்கரமான திட்டமா? கொந்தளித்த எம்பி பிரக்யா தாகூர்
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பலவீனமான இனங்களைச் சேர்ந்த காளைகளுக்குக் கருத்தடை செய்யப்படும் என வெளியான அறிவிப்பிற்கு பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் மாடுகள் இனப்பெருக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி பலவீனமான இனங்களைச் சேர்ந்த காளைகளுக்கு வரும் அக்டோபர் 4 முதல் 23 வரை கருத்தடை ஆப்ரேஷன் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு அம்மாநிலம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பெட்ரோல் விலை உயர்வு என்பது காங்கிரசின் பொய் பிரச்சாரம்.. பிரக்யா கருத்து.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
திட்டம் வாபஸ்
குறிப்பாக, பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானிடம் பேசிய அவர் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், அம்மாநிலத்தின் கால்நடைத் துறை அமைச்சர் பிரேம் சிங் பட்டேலிடமும் இது குறித்துப் பேசினார். இது தொடர்பாகச் சரியான முடிவு எடுக்கப்படும் என இருவரும் பிரக்யா சிங் தாகூருக்கு உறுதி அளித்தனர் இந்தச் சூழலில் காளைகளைக் கருத்தடை செய்யும் திட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை இத்திட்டம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய சதி
இது தொடர்பாக பிரக்யா சிங் தாகூர் கூறுகையில், "நாம் பசுக்களை நந்தினி மற்றும் தாய் என்று அழைக்கிறோம். இந்த சூழலில் மாடுகளை அழிக்க இங்குச் சதி நடக்கிறது. மாடுகளை முழுவதுமாக அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த உத்தரவைப் பார்த்த பிறகு நான் மிகவும் வருத்தப்பட்டேன். காளைகளுக்குக் கருத்தடை செய்வதன் மூலம் நாட்டிலுள்ள மாடுகளை அழிக்கும் திட்டம் தான் இது. அவர்கள் பலவினமான காளைகளுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்படும் எனக் கூறுகின்றனர். காளை பலவீனமாக இருந்தால், அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. பிறகு எதற்குத் தனியாகக் கருத்தடை ஆப்ரேஷன்.
பேருந்துகளைப் பாதுகாக்கும் ஆட்சி
இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தெரியாமல் கூட வந்திருக்கலாம். இங்கு உள்நாட்டில் நமது மாடுகளை ஒழிக்க மிகப் பெரிய சதி நடக்கிறது. பசுக்களைப் பாதுகாப்பதற்கான அரசைத் தான் சவுஹான் இங்கு அமைத்துள்ளார். அதற்காகத் தனியாக ஒரு அமைச்சகமும் கூட உள்ளது. எனவே, அவருக்குத் தெரியாமல் இந்த உத்தரவு வந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்" என்று தெரிவித்தார்.
என்ன திட்டம்
மத்தியப் பிரதேசத்தில் பலவீனமாக உள்ள 12 லட்சம் காளைகளை 12 கோடி ரூபாய் செலவில் கருத்தடை செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் மாடுகளின் இனப்பெருக்கம் வலிமையாக இருக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் தான் பாஜக எம்பியின் எதிர்ப்பை தெரிந்து இத்திட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டுதல்கள்
முன்னதாக, நவராத்திரி கொண்டாட்டங்களின் போது கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதாகப் பலர் மீது போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பிரக்யா சிங் தாகூர் எச்சரித்திருந்தார். அம்மாநிலத்தின் உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து நவராத்திரி கொண்டாட்டங்களின் போது கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று போபால் நிர்வாகம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.