உபேர் விவகாரம் எதிரொலி... பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும் டாக்சிகளை அறிமுகப்படுத்தும் ஓலா!
டெல்லி: டெல்லியில் இளம்பெண் ஒருவர் உபேர் டாக்சி டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பான பயணம் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓலா கேப்ஸ், டாக்சி நிறுவனண் பெண்களுக்காக பெண்களே இயக்கும் டாக்சிகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரவு விருந்து முடிந்து கால் டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் டாக்சி டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் மீது ஏற்கனெவே பல்வேறு பலாத்கார புகார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து உபேர் டாக்சிகளுக்கு பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டாக்சி நிறுவனம்தான் உபேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆண்கள் டிரைவர்களாக இருந்தால் தானே பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள வேண்டும். மகளிர் பேருந்து போன்று பெண் பயணிகளுக்கு என பிரத்யேகமாக பெண் டிரைவர்களை நியமித்தால் இப்பிரச்சினை ஏற்படாது அல்லவா.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு ஓலா கேப்ஸ் நிறுவனம், பெண்களுக்காக பெண்களே இயக்கும் டாக்சிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே, பெண் டிரைவர்களை தேர்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என்பது ஓலா கேப்ஸின் திட்டமாகும்.
தற்போது ஜி கேப்ஸ், பிரியதர்ஷினி டாக்ஸிஸ், விர்ரா கேப்ஸ் ஆகிய சில நிறுவனங்கள் பெண்களுக்காக, பெண்களை ஓட்டும் டாக்சிகளை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பட்டியலில் தற்போது ஓலாவும் இணைகிறது. ஆனால் முந்தைய ஆல் உமன் பெண் டாக்சிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் ஓலாவின் திட்டம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.
ஓலாவிடம் தற்போது 50 முதல் 100 பெண் டிரைவரா்கள் உள்ளனராம். இவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவுள்ளது இந்த நிறுவனம்.