மோடிக்கும் ஹவாலா மோசடி மன்னனுக்கும் தொடர்பு- புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டது காங்.!
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் ஹவாலா மோசடி மன்னன் அஃப்ரோஸ் பாட்டாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறி புகைப்பட ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் ஹவாலா மோசடி கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் வத்ராவின் நிலக் கொள்ளை தொடர்பாகவும் பாஜக வீடியோ வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலடிக்கும் விதமாக நரேந்திர மோடிக்கும் ஹவாலா மோசடி மன்னன் அஃப்ரோஸ் பட்டாவுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று கூறியுள்ள காங்கிரஸ் அதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா இந்த புகைப்படத்தை வெளியிட்டு கூறியதாவது:
ரூ700 கோடி அன்னிய செலாவணி மோசடி மற்றும் ஹவாலா மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர்தான் அஃப்ரோஸ் பட்டா. அந்த அஃப்ரோஸ் பட்டாவும் மோடியும் இருக்கும் புகைப்படங்களை பாரதிய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியின் இணையதளமும் "பெருமையுடன்" வெளியிட்டுள்ளன. இந்தப் படங்களில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹூசேன், குஜராத் அமைச்சர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.
இது தொடர்பாக மோடி என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு மோடி தயாராக இருக்கிறா?.
இவ்வாறு ரந்தீப் சுர்ஜிவாலா கூறினார்,