ஹெலிகாப்டர் பேர ஊழல்: தொழில் அதிபர் சூரஜ் பிரகாஷ் மெஹ்ரா வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு
டெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக தொழில் அதிபர் சூரஜ் பிரகாஷ் மெஹ்ராவின் வீட்டில் அமலாக்கப் பிரிவினர் இன்று சோதனை நடத்தினர்.
2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஐபிகளுக்கான 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்ச பணம் இந்தியர்களுக்கு இடைத் தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக 2013-ம் ஆண்டில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர், அவர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தியாகியிடம் கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தொழில் அதிபர் சூரஜ் பிரகாஷ் மெஹ்ராவின் வீட்டில் அமலாக்கப்பிரிவினர் இன்று சோதனை நடத்தினர்.
விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்திற்கு வருமாறு மெஹ்ராவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை. இதையடுத்து தான் இந்த சோதனை நடந்துள்ளது. ஹெல்காப்டர் ஒப்பந்தம் போடப்பட்டபோது இடைத்தரகர்கள் கிறிஸ்டியன் மிஷெல் மற்றும் ஹாலந்தை சேர்ந்த கிறிஸ்டீன் ஸ்பிலிட்டுடன் மெஹ்ரா தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
மெஹ்ராவின் இரட்டை குழந்தைகள் மிஷெல் மற்றும் ஸ்பிலிட்டுடன் சேர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த பீட்டில் நட் ஹோம் லிமிடெட் நிறுவனத்தில் பார்ட்னர்களாக உள்ளனனர். இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் மெஹ்ராவின் உறவினர் கரண் சேத்தியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மெஹ்ரா அண்மையில் தான் இங்கிலாந்தில் உணவகம் ஒன்றை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications