ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம் சாமுண்டீஸ்வரிக்கு நடத்திய பூஜை பலன் கொடுத்ததா?
மைசூர்: தமிழகத்தில் மட்டுமல்ல மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலிலும் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி ஜெயலலிதா ஜாமீனுக்காக வேண்டிக்கொண்டனர். சாமுண்டீஸ்வரி அம்மன் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வங்களில் ஒருவர் என்பது முக்கியமானது.
கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் பிறந்தவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. எனவே மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் மீது அவருக்கு மிகுந்த பக்தி உண்டு. அவ்வப்போது அம்மனை தரிசனம் செய்து வருவது ஜெயலலிதா வழக்கம். கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார் ஜெயலலிதா.
இந்நிலையில், கர்நாடக ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தின் பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டாலும், ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வமான சாமுண்டீஸ்வரி கோயிலில் பூஜை நடத்த அதிமுகவினர் மறந்துவிட்டனர்.
இந்நிலையில்தான், இன்று காலை முன்னாள் எம்.பி பன்னீர்செல்வம் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மைசூர் சாமுண்டி மலையின் மீதுள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் இந்த பூஜைகள் நடந்தன.
பூஜைகள் முடிந்து தொண்டர்கள் வெளியே வந்தபோது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்ற தகவலும் அவர்கள் காதுக்கு சென்று சேர்ந்தது. உடனடியாக அங்கேயே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் நடத்தி கோயில் வளாகத்தை களைகட்டச் செய்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்.