அதிமுக, திமுகவின் ”மதுவிலக்கு” பிரச்சாரம்- காரணமே நான்தான் என்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்!
பாட்னா: தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து அரசியல் கட்சிகள் பரீசிலிக்க துவங்கியுள்ளதே என்னால்தான் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மதுவிலக்கை தங்களுடைய தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளன என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு உள்ளது. மாநிலத்தில் கடந்த வாரம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார் நிதிஷ் குமார்.
பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பீகாரில் மதுவிலக்கு வந்ததால் தங்களுடைய மது விற்பனை அதிகரித்துள்ளதாக நம் அண்டை மாநிலங்கள் மகிழ்ச்சியில் உள்ளன. இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
தமிழகத்தில் நடக்கும் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. பீகாரின் முயற்சி மிக வேகமாக தமிழகம் வரை பரவியுள்ளது. நம் அண்டை மாநிலங்களான, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்திலும் விரைவில் மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைப்பர்" என்று தெரிவித்தார்.