ஜெ. சொத்து வழக்கு தீர்ப்பு: ரயில், விமானங்கள் மூலம் பெங்களூரில் குவியும் அதிமுகவினர்
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளில் பெங்களூருக்குள் தமிழக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுவதால், ரயில் மற்றும் விமானங்களின் மூலமாக பெங்களூருக்குள் வர தமிழக அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27ம்தேதி, சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கோர்ட் வளாகத்துக்கு வெளியே குவிய அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராகிவருகின்றனர்.
ஹோட்டல்கள் புல்
இதற்காக பெங்களூரிலுள்ள பல ஹோட்டல்களில் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன. 26ம்தேதி முதல் பெங்களூரில் வந்து குவிய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஜெயலலிதா எச்.ஏ.எல் விமான நிலையத்தில் வந்திறங்கி அங்கிருந்து கார் மூலமாக சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு செல்ல உள்ளார்.
வருகிறது வழக்கறிஞர் குழு
ஜெயலலிதா பயணிக்கும் வழி நெடுகிலும் ஆடுகோடி, கோரமங்களா, மடிவாளா, சில்க்போர்ட், பொம்மனஹள்ளி, சிங்கச்சந்திரா உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதாவை வாழ்த்தி பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர்களும், தீர்ப்பு தேதியில் பெங்களூர் கோர்ட்டுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் அணிதிரள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "அதிமுகவுக்கு 1.5 கோடி தொண்டர்கள் உள்ளனர். நாங்கள் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஜெயலலிதாவை விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தமிழக வாகனங்களுக்கு தடை
அதிமுகவினர் குவியப்போவதை அறிந்து கொண்ட கர்நாடக காவல்துறையினர் நாளை முதல் பெங்களூருக்குள் தமிழக பதிவெண் கொண்ட தனியார் வாகன வாகனங்களை நுழைய தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர். அதிமுகவினர் அதிக அளவில் குவிந்தால், சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படும் என்று போலீசார் கருதுகின்றனர்.
அல்வா கொடுப்போமில்ல..
போலீசாரின் நடவடிக்கையை மனதில் வைத்து சாலை வழியை தவிர்த்துவிடுமாறு அதிமுக நிர்வாகிகள், தங்கள் தொண்டர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக இளைஞர் பாசறையை சேர்ந்த நிர்வாகி ஒருவரும் இந்த தகவலை உறுதி செய்தார்.எனவே விமானம் மற்றும் ரயில்கள் மூலமாக பெங்களூருக்குள் வர அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு நாள் ஒன்றுக்கு 20க்கும் மேற்பட்ட ரயில்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.