ஜாமீன் விசாரணை தள்ளிப்போன அதிர்ச்சி: பெங்களூர் சிறை முன்பு அழுது, புரண்டு அதிமுகவினர் தர்ணா
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு தள்ளிப்போயுள்ளதால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் பெங்களூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அழுது, புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை பார்க்க தங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது போன்ற நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக அடிமட்ட தொண்டர்கள் பலரும் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள பகுதிகளில் தினமும் வந்து குவிகின்றனர்.
சரத்குமார் போன்ற பிரபலங்களும், அமைச்சர்கள், எம்.பிக்களும் ஜெயலலிதாவை பார்க்க மத்திய சிறைச்சாலைக்கு சாரை சாரையாக வருகின்றனர்.
இதையடுத்து சிறை அமைந்துள்ள பகுதிக்கு 2 கி.மீ முன்பே, போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, அதிமுக தொண்டர்களை தடுத்து வருகின்றனர். உரிய அனுமதி உள்ளவர்களை மட்டுமே சிறை வளாகத்திற்குள் போலீசார் அனுமதிக்கின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு இன்று ஜாமீன் கிடைத்துவிடும், இதையடுத்து, அவர் வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள் சிலர் பரப்பன அக்ரஹாராவில் காத்திருந்தனர்.
ஆனால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகியதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். திடீரென வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு சிறை வளாகத்திற்குள் செல்ல முற்பட்டனர். போலீசாரின் தடுப்புகளை தள்ளியபடி 'அம்மாவை விடுதலை செய்', 'எங்க அம்மாவை விடுதலை செய்' என்று கோஷமிட்டனர்.
சிலர் கீழே சரிந்து விழுந்து, உருண்டு, புரண்டு கண்ணீர் விட்டு கதறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு, அதிமுகவினரை கலைந்து போக சொல்லிப்பார்த்தனர். ஆயினும் போராட்டத்தைவிடப்போவதில்லை என்று அதிமுகவினர் தெரிவித்துவிட்டனர்.